தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர் குறைந்துள்ளது என்பதுதான் பாரதிய ஜனதா கட்சியின் குற்றச்சாட்டு என்று பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர் குறைந்துள்ளது என்பதுதான் பாரதிய ஜனதா கட்சியின் குற்றச்சாட்டு என்று பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் அரூரில் பாஜக 8 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழக அரசின் மூலம் ஏழை மக்களுக்கு உணவுக்காக பயன்படுத்தக் கூடிய அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் தரமற்ற வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இந்திய உணவு கழகம் முறையாக தமிழக அரசுக்கு உணவுப்பொருளை வழங்குகிறது. அவ்வாறு வழங்கப்படும் உணவுப் பொருட்களை உரிய முறையில் பதப்படுத்தபடாமல் பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது ஏற்புடையதல்ல.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் கடந்த கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. கஞ்சா பாக்கெட்டை எடுத்து சட்டசபையில் காட்டியவர் தான் தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் மாணவர்கள் மத்தியில் கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பது மாநில வளர்ச்சிக்கு நல்லதல்ல. இதுகுறித்து பலமுறை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்தும், இதுவரை தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது வருத்தத்துக்குரியது. போக்சோ சட்டம் ஒன்று மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் தமிழகத்தில் உள்ள பெண்களை திமுகவினரிடம் இருந்து காப்பாற்றி இருக்க முடியாது. பொதுவாகவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர் குறைந்துள்ளது என்பதுதான் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் குற்றச்சாட்டு.

சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 20 படு கொலைகள் நடைபெற்றுள்ளன. கடந்த ஒரு ஆண்டில் கஞ்சா விற்பனை அதிகமாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். கொலை, கொள்ளை போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளது. தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பேசி வருகின்றன. திராவிட மாடல் ஆட்சி என்றால் என்னவென்று அதன் கூட்டணியில் இருக்கும் கி.வீரமணி, அம்பேத்கர் புகைப்படம் போட்டு அரசியல் செய்யும் திருமாவளவன் உள்ளிட்டோர் விளக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.