150ஐ எதிர்பார்த்து... இவ்வளவு பெரிய பின்னடைவு பாஜக.,வுக்கு ஏன் ஏற்பட்டது?
வாக்களிப்பது ஜனநாயகக் கடமை என்று ஒவ்வொரு தேர்தலின் போதும் கூறித்தான் வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் குடியரசுத் தலைவர் முதற்கொண்டு, பிரதமர் தொடங்கி பலரும் வாக்களியுங்கள் என்று சொல்லித்தான் வருகிறார்கள். ஆனாலும், வாக்களிக்காமல் இருப்பவர்கள், அல்லது வாக்களிக்க இயலாமல், வழியின்றி இருப்பவர்கள் பலர்தான்!
இந்த முறை, குஜராத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலை விட தற்போதைய தேர்தலில் 84 லட்சம் பேர் வாக்களிக்கவில்லையாம்!
குஜராத் தேர்தலில் மட்டும், கடந்த தேர்தலில் வாக்களித்தவர்களின் சதவீதம், 71.34 என இருந்தது. ஆனால், இம்முறை அந்த அளவு 3 சதவீதம் குறைந்து, 68.41 சதவீதம் எனப் பதிவானது. கடந்த முறை 3.8 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். ஆனால் தற்போது 2.96 கோடி பேர்தான் வாக்களித்துள்ளனர்.
ஒரு காலத்தில் பாஜக.,வின் கோட்டையாகக் கருதப்பட்ட சௌராஷ்டிரா உள்ளிட்ட மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. அவர்கள் வாக்கு அளிக்காததால், இங்கே காங்கிரஸ் சில தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சௌராஷ்டிரம், மேற்கு கடற்கரைப் பகுதிகளில் பாஜக.,வின் வழக்கமான வாக்காளர்கள் இம்முறையும் போட்ட்டிருந்தால், காங்கிரஸ் அதிக தொகுதிகளை இழந்திருக்கும்.
வாக்களிக்காதவர்களின் எண்ணிக்கையைப் போல், அடுத்து நோட்டாவுக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கையும் இங்கே அதிகம்தான்! நோட்டாவுக்கு சுமார் 5 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.
சில ஆண்டுகளாக யாருக்கும் வாக்களிக்க விரும்பம் இல்லை எனப்படும், ' நோட்டா' வசதியை ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி வருகிறது. குஜராத் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலில், மதியம் வரை தெரியவந்ததன் அடிப்படையில், குஜராத் தேர்தலில், 5,18,235 பேர் 'நோட்டா'வுக்கு வாக்களித்துள்ளனர். இது, 1.8 சதவீதம். பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பெற்ற வாக்குகளை விட ' நோட்டா'வுக்கு அதிகம் வாக்குகள் கிடைத்துள்ளன. இதுவரை, பாஜக.,வுக்கு 1,38,74,833 ஓட்டுக்களும் (49%) காங்கிரஸுக்கு 1,17,26,016 ஓட்டுக்களும் (41.5 %) கிடைத்துள்ளன என்று கூறியுள்ளது.
பொதுவாக, வாக்கு சதவீதம் குறைந்தாலே, அரசுக்கு எதிரான அதிருப்தி அலை ஏதும் இல்லை என்று பொதுவாக சொல்லி விடுவார்கள். அது இந்தத் தேர்தலிலும் எதிரொலித்துள்ளது.