நம்பிக்கை வாக்கெடுப்பு முறையாக நடக்கவில்லை…ஓபிஎஸ் அணி சார்பில் தொடரப்பட்ட வழக்கை திரும்பப் பெற்றார் மாஃபா !!!
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு முறையாக நடைபெறவில்லை என உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடர்ந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவிக்கு எதிரா போர்க் கொடி உயர்த்திய ஓபிஎஸ் தனி அணியாக பிரிந்து சென்றார். இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து கடந்த பிப்ரவரி 18 ம் தேதி எடப்பாடி அரசு மீது சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி பெற்றது.
இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் இணைக்கப்பட்டன. ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைந்த பிறகு, தாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து விட்டதால் இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக மாஃபா பாண்டியராஜன் தரப்பில் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழக்கை வாபஸ் பெற இன்று அனுமதி அளித்துள்ளது.