நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயிக்க புது ரூட் போடும் எடியூரப்பா!! லிங்காயத்து எம்எல்ஏ க்களுக்கு மாடாதிபதிகள் மூலம் மிரட்டல்….
இன்று நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பாவுக்கே வாக்களிக்க வேண்டும் என காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளைச் சேர்ந்த லிங்காயத்து எம்எல்ஏக்களுக்கு மடாதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அறுதிப் பெரும்பான்மை இல்லாத பாஜக கர்நாடகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது.அதே நேரத்தில் இன்று மாலை 4 மணிக்கு முதலமைச்சர் எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்களை எப்படியாவது வளைக்க பாஜக முயன்று வருகிறது, அதன் ஒரு பகுதியாக லிங்காயத்து மடங்களின் தலைவர்களை வைத்து, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி எம்எல்ஏக்கள் மிரட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகாவில் 17 சதவீதம் உள்ள, லிங்காயத்துகள் எப்போதுமே பாஜகவின் வாக்கு வங்கி. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் எம்எல்ஏக்கள் சுமார் 20 பேர் லிங்காயத்து சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில், அவர்கள் ஆதரவை பாஜகவிற்கு பெற மத தலைவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். லிங்காயத்து சமூகத்தை சேர்ந்த எடியூரப்பா முன்பு முதல்வராக இருந்தபோது லிங்காயத்து மடங்கள் செய்து வரும் கல்வி மற்றும் மருத்துவ சேவைகளுக்காக நிறையவே நன்கொடைகளை வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், லிங்காயத்து சமூக எடியூரப்பாவுக்கே லிங்காயத்து எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும் அல்லது லிங்காயத்து மக்களிடம் சொல்லி உங்களை புறக்கணிக்க அறிவுறுத்தப்படும் என மதத் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
104 உறுப்பினர் பலம் மட்டுமே கொண்டுள்ள பாஜக, எப்படியாவது ஆட்சியை தக்க வைக்க இதுபோன்ற வழிகளையும் பின்பற்றுவதாக கூறப்படுகிறது.