vivek iterate all pay tax who earn illegal
சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள், வழக்கறிஞர்கள், ஜோதிடர் என சசிகலாவுடன் தொடர்புடைய அனைவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 5 நாட்களாக வருமான வரி சோதனை நடைபெற்றது.
கோடநாடு பங்களா, டீ எஸ்டேட் உட்பட சில இடங்களில் மட்டும் 6-வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்றுவருகிறது.
சசிகலாவுடன் தொடர்புடையவர்களை டார்கெட் செய்து இந்த சோதனை நடத்தப்பட்டாலும், இளவரசியின் மகனும் ஜெயா டிவி மற்றும் ஜாஸ் சினிமாஸை நிர்வகித்துவருபவருமான விவேக்கை மையமாக வைத்தே தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 5 நாட்களாக நடந்த சோதனையில், பல கோடி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களும் முறைகேடான பணப்பரிமாற்றம் செய்ததற்கான ஆவணங்களும் போலி நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 5 நாட்களாக விவேக் வீட்டில் நடந்த சோதனை நேற்று மாலை முடிவடைந்தது. பின்னர் விவேக்கை விசாரணைக்காக வருமான வரித்துறையினர் அழைத்து சென்றனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய விவேக், ஜெயா டிவி மற்றும் ஜாஸ் சினிமாஸை கடந்த 2 ஆண்டுகளாக நிர்வகிக்கும் தன்னிடம் அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியதாகவும் அதற்கான தெளிவான விளக்கத்தை தான் அளித்ததாகவும் விவேக் தெரிவித்தார்.
திருமணத்தின் போது தனது மனைவிக்கு போட்ட நகை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் தான் பதிலளித்ததாகவும் விவேக் தெரிவித்தார். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் மீண்டும் விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளதாகவும் அப்போதும் வருமான வரித்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாகவும் விவேக் தெரிவித்தார்.
மேலும், சாமானியர் முதல் அமைச்சர் வரை யாராக இருந்தாலும் தவறாக சம்பாதித்தால் வரி கட்டியே தீர வேண்டும் என விவேக் கூறினார். மேலும், வருமான வரித்துறையினர் அவர்களின் கடமையை செய்துள்ளதாகவும் தன் தரப்பில் தான் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
