கள்ள துப்பாக்கி கண்டெடுப்பு.. வசமாக சிக்கிய விவேக்..! வச்சு செய்யப்போகும் வருமான வரித்துறை..!
சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள், வழக்கறிஞர்கள், ஜோதிடர் என சசிகலாவுடன் தொடர்புடைய அனைவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 5 நாட்களாக வருமான வரி சோதனை நடைபெற்றது.
கோடநாடு பங்களா, டீ எஸ்டேட் உட்பட சில இடங்களில் மட்டும் 6-வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்றுவருகிறது.
கடந்த 5 நாட்களாக நடந்த சோதனையில், கணக்கில் வராத 1400 கோடி ரூபாய்க்கான ஆவணங்களும் முறைகேடான பணப்பரிமாற்றம் செய்ததற்கான ஆவணங்களும் போலி நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சசிகலா தொடர்புடைய அனைவரிடமும் சோதனை நடத்தப்பட்டிருந்தாலும்கூட, இளவரசியின் மகன் விவேக்கை மையமாக வைத்தே தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள விவேக்கின் வீட்டில் 5 நாட்களாக நடத்தப்பட்ட சோதனை நேற்று மாலை முடிவுக்கு வந்தது. விவேக்கின் வீட்டிலும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. விவேக்கின் பாஸ்போர்ட்டை வருமான வரி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பாஸ்போர்ட் வைக்கப்பட்டிருந்த இடத்தில் 3 துப்பாக்கிகள் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ஆயுத சட்டத்தின்படி, ஒரு நபர் 2 துப்பாக்கிகள் வைத்துக்கொள்ளலாம். ஆனால், விவேக்கிடம் 3 துப்பாக்கிகள் இருந்துள்ளன. அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக ஒரு கள்ள துப்பாக்கி வைத்திருந்ததையும் வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே இதுதொடர்பாகவும் விவேக்கிடம் தீவிர விசாரணை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.