visalatchi neduchezhiyan son joined in ops team
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில்தான் மரணமடைந்தார் அதிமுகவின் அமைப்பு செயலாளராக இருந்த விசாலாட்சி நெடுஞ்செழியன்.

அவரது மறைவுக்கு அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அப்போது ஜெயலலிதா உடல்நலம் குறித்து எந்தவொரு தகவலும் சரியான முறையில் வெளியில் வராத காலம் அது.

அந்த காலகட்டத்தில் விசாலாட்சியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஜெயலலிதா பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டது.
மேலும் அவரது மூத்த மகனான மதிவாணன் செய்தியாளர்களிடம் பேசும்போது,
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதா தன்னிடம் பேசி தனது தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததாக கூறினார்.

ஜெ. பற்றி எதுவும் தெரியாமல் இருந்த நேரத்தில் மறைந்த விசாலாட்சி நெடுஞ்செழியனுக்கு இரங்கல் தெரிவித்ததோடு அவரது மகனிடமும் ஜெயலலிதா பேசினார் என்பது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இப்படி ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போது தன்னிடம் பேசினார் என முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன் மற்றும் விசாலாட்சியின் மகனான மதிவாணன் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் அணியில் இணைந்துள்ளார்.

தற்போது ஓபிஎஸ்சுடன் இணைந்துள்ள மதிவாணனின் மனைவி கல்யாணி ஆவார்.
இவர் மதுரை காமராஜர் பலகலைகழகத்தில் துணை வேந்தராக இருந்தபோது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.ஆனாலும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாத ஜெயலலிதா அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவரை காப்பாற்றி வந்தார்.
மதுசூதனன், பொன்னையனை தொடர்ந்து மற்றுமொரு அமைப்பு செயலாளராக இருந்த விசாலாட்சி நெடுஞ்செழியன் குடும்பத்தினரும் ஓபிஎஸ்சுடன் இணைந்ததால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
