விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ மரணம்… புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் !!
புற்று நோயால் பாதிக்கப்ட்டிருந்த விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ கு.ராதாமணி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டப் பேரவைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கு,ராதாமணி வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் எம்எல்ஏவாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் அவர் திடீரென புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அதற்காக அவர் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் கடந்த வாரம் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விழுப்புரத்தில் உள்ள வீட்டில் ஓயவெடுத்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலை மோசமடையவே புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிர் பிரிந்தது.
ராதாமணி கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தான் முதன் முதலாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக அவைத் தலைவராகவும் அவர் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில்தான் அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளார். அவரது உடல் இன்று விழுப்புரத்தில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று தெரிகிறது.