அந்தப் பதவிதான் கிடைக்கல... ஆனாலும் முக்கிய பதவியைப் பிடித்த விஜயதரணி.. காங்கிரஸ் அறிவிப்பால் ஹேப்பி ஆவாரா?
தமிழக சட்டப்பேரவையின் காங்கிரஸ் கட்சி கொறடாவாக விளங்கோடு எம்.எல்.ஏ. எஸ்.விஜயதரணி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 18 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் பதவிக்கு விஜயதாரணி, ராஜேஷ்குமார், செல்வபெருந்தகை உள்ளிடோர் ஆர்வம் காட்டினர். ஆனால், காங்கிரஸ் மேலிடம் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவராக கு.செல்வப்பெருந்தகையையும் துணைத் தலைவராக ராஜேஷ்குமாரையும் மே 23 அன்று அறிவித்தது. ஆனால், கொறடா உள்பட பிற பதவிகள் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் கட்சியின் மற்ற நிர்வாகிகளை நியமித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன்படி, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் மு.அப்பாவுவுக்கு கே.எஸ்.அழகிரி கடிதம் எழுதியுள்ளார். அதில் காங்கிரஸ் சட்டப்பேரவையில் காங்கிரஸ் சார்பில் நியமிக்கப்பட்டவர்களைக் குறிப்பிட்டுள்ளார்.
* சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் - கு.செல்வப்பெருந்தகை
* துணைத் தலைவர் - எஸ்.ராஜேஷ்குமார்
* கொறடா - எஸ்.விஜயதரணி
* துணை கொறடா - ஜெ.எம்.ஹெச்.ஹசன் மௌலானா
* செயலாளர் - ஆர்.எம்.கருமாணிக்கம்
* பொருளாளர் - ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் பதவிக்கு ஆர்வம் காட்டிய விஜயதரணிக்கு கொறடா பதவி வழங்கப்பட்டுள்ளது.