Asianet News TamilAsianet News Tamil

மூணு முடிச்சாலே முட்டாளா ஆனேன் கேளு கேளு தொண்டா...! வெறுத்துக் கலங்கும் விஜயகாந்த்... பேரதிர்ச்சியில் பிரேமலதா..!

அல்லு தெறிக்கும் அரசியல் பரபரப்பில் டிரெண்டிங்கில் முதலாவது இடத்தில் இருக்கிறது விஜயகாந்தின் அரசியல் குடும்பம்! ஆனால் இதில் அவர்களுக்கு எந்தப் பெருமையும், சந்தோஷமும் இல்லை. காரணம்?...சர்வ கட்சிகளால் மட்டுமின்றி, சொந்த கட்சியினராலும் மட்டுமின்றி பொதுமக்களாலும் கழுவிக் கழுவி ஊற்றப்படுகிறது கேப்டன் குடும்பம் என்பதுதான் விவகாரமே. 

vijayakanth upset...
Author
Tamil Nadu, First Published Mar 8, 2019, 11:50 AM IST

அல்லு தெறிக்கும் அரசியல் பரபரப்பில் டிரெண்டிங்கில் முதலாவது இடத்தில் இருக்கிறது விஜயகாந்தின் அரசியல் குடும்பம்! ஆனால் இதில் அவர்களுக்கு எந்தப் பெருமையும், சந்தோஷமும் இல்லை. காரணம்?...சர்வ கட்சிகளால் மட்டுமின்றி, சொந்த கட்சியினராலும் மட்டுமின்றி பொதுமக்களாலும் கழுவிக் கழுவி ஊற்றப்படுகிறது கேப்டன் குடும்பம் என்பதுதான் விவகாரமே. 

ஏன் அப்படி?... கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் மிக மோசமான சறுக்கல்களை சந்தித்து, ஒரு தொகுதியில் கூட வெற்றி கிட்டாத நிலையில் ஆழ்ந்த உறக்கத்திற்கு ஆட்பட்டது தே.மு.தி.க. அதிலும் விஜயகாந்தின் உடல்நிலையில் ஏற்பட்ட சறுக்கலும் சேர்ந்து கொண்டதால் கட்சியின் நிலை கவலைக்கிடமானது. ஆனால் ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் மறைவுகளால் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை மாற்றத்தினால் மீண்டும் அக்கட்சிக்கு ஒரு புத்துயிர் கிடைக்கும் சூழல் இந்த நாடாளுமன்ற தேர்தலின் மூலம் உருவானது.

 vijayakanth upset...

தாங்கள் இருக்கும் கூட்டணியில் தே.மு.தி.க. இருந்தாக வேண்டும்! என்று பி.ஜே.பி. ஆசைப்பட்டது. விஜயகாந்தின் விருப்பமும் அதுதான். ஆனால் அவரது மனைவியும், கழக பொருளாளருமான பிரேமலதாவின் எண்ணமோ ‘வேறு’ வகையில் இருக்கிறது! என்று துவக்கத்தில் இருந்தே புலம்பினார்கள் தொண்டர்களும், நிர்வாகிகளும். பிரேமலதாவின் தம்பியான சுதீஷூம் மச்சானின் மனதைப் புரிந்து கொண்டாலும் கூட, அக்காவுக்கு ஏதிராக செயல்பட முடியாத நிலையில் இருக்கிறார். vijayakanth upset...

இதேவேளையில் தி.மு.க.வும் விஜயகாந்தின் கூட்டணியை எதிர்பார்த்தது. எந்த ஈகோவுக்கும் இடம் கொடுக்காமல் ஸ்டாலின் நேராக விஜயகாந்தின் வீட்டுக்கே வந்து அவரை சந்தித்தார். இந்த சந்திப்பை ஸ்டாலின் நாகரிகம் கருதி ’சகோதரரின் உடல்நலன் விசாரிக்க வந்தேன்’ என்றார். இப்படியாக தே.மு.தி.க. கூட்டணியை வேண்டி தங்களின் வீட்டுக்கே வந்த பி.ஜே.பி., அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வந்து நின்ற நிலையில் அக்கட்சியோ உச்சாணிக் கொம்பில் ஏறி நின்று கொண்டு இறங்க மறுத்தது. ’பா.ம.க. போல் ஏழு சீட் கொடுங்கள்’ என்று அ.தி.மு.க. கூட்டணிக்கு நிபந்தனை வைத்தது, தி.மு.க.விடமோ ‘அங்கே பா.ம.க.வாங்கியதை விட அதிக மக்களவை சீட்களும், மாநிலங்களவை சீட்களும் வேண்டும்.’ என்று வேற லெவல் நிபந்தனை விதித்தது. இரண்டு பெரிய கட்சிகளும் அதிர்ந்தன. vijayakanth upset...

பி.ஜே.பி.யின் டெல்லி வி.ஐ.பி.யான பியூஸ் கோயலும், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வமுமே விஜயகாந்தின் வீடு தேடி சென்று சந்தித்தும் கூட எந்த பலனுமில்லை. கடந்த புதனன்று சென்னையில் பிரதமர் கலந்து கொண்ட அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் பிரம்மாண்ட பிரசார மேடையில் விஜயகாந்தை உட்கார வைக்க கோயல் - பன்னீர் டீம் எடுத்த முயற்சிகள் வீணாய் போயின. மேலும் இருவரின் மனதும்தான் புண்பட்டது. கூட்டணியை ஏற்று பிரதமர் மேடைக்கு வரச்சொல்லி அ.தி.மு.க. சைடிலிருந்து கோரிக்கை வைத்துக் கொண்டிருந்த அதேநேரத்தில் தி.மு.க. பக்கம் பேசிக் கொண்டிருந்தது தே.மு.தி.க.வின் ஒரு டீம். vijayakanth upset...

அந்த பேச்சுவார்த்தையை ‘கூட்டணிக்கு வருகிறோம். நியாயமான எண்ணிக்கையில் சீட் கொடுங்கள் என்று பேசினார்கள். ஆனால் நாங்கள் கூட்டணியை இறுதி செய்துவிட்டோம், சீட் இல்லை என சொல்லிவிட்டேன்.’ என்று துரைமுருகன் போட்டு உடைத்தார். சில நாட்களுக்கு முன் விஜயகாந்தை சந்தித்ததற்கு நாகரிகமாக காரணத்தை சொன்ன ஸ்டாலினின் மூக்கை ‘அரசியல் பேச்சு நடந்தது’ என்று சொல்லி பிரேமலதா உடைத்தார். அதற்கு சேர்த்து வைத்து துரைமுருகன் படு மோசமாக பழிவாங்கிவிட்டார். தங்கள் பக்கம் பேசிக் கொண்டிருக்கும் அதேவேளையில் தி.மு.க. பக்கமும் ரகசிய டீலிங்கை ஓட்டும் தே.மு.தி.க. மீது எடப்பாடி பழனிசாமியும், கோயலும் கடும் கோபத்தில் இருக்கின்றனர். ’இனி நாமாக அவர்களிடம் பேச வேண்டாம். தேடி வந்தால் இறுக்கிப்பிடித்து ஏதாவது கொடுப்போம்!’ என்று உத்தரவே போட்டுவிட்டாராம் எடப்பாடி. vijayakanth upset...

ஆக தி.மு.க. கூட்டணியில் இணைய வழியில்லாமல் போய், அ.தி.மு.க. கூட்டணியில் அடித்துப் பேசும் அதிகாரத்தையும் இழந்து கிட்டத்தட்ட நடுத்தெருவில் நிற்கதியாய் நிற்கிறது தே.மு.தி.க. வேறு வழியே இல்லாமல் நிச்சயம் அ.தி.மு.க.விடம்தான் சரணடைந்தாக வேண்டும் அவர்கள்! என்பதே விமர்சகர்களின் கணிப்பு. அது நடக்கும், நடக்கலாம், அப்படி நடந்தால் பழைய கெத்துடன் எதையும் கூட்டணியில் பேச முடியாது விஜயகாந்த் தரப்பினால். தே.மு.தி.க.வுக்கு இந்த நிலை வரக்காரணம் ‘பிரேமலதாவின் பேராசையும், தங்கள் கட்சி பற்றிய அதீத நம்பிக்கையும், விஜயகாந்த்! எனும் பிராண்டை பொன் முட்டையிடும் வாத்தாக பயன்படுத்த முயன்றதே!’ என்று விமர்சகர்கள், அனைத்து எதிர்க்கட்சிகள், மீடியாக்கள், பத்திரிக்கைகள், பொதுமக்கள் என எல்லா தரப்புமே விமர்சிக்கின்றன வகைதொகையில்லாமல். vijayakanth upset...

இது கேப்டனின் காதுகளிலும் விழத்தான் செய்கிறது. பரபர அரசியல் பேச்சுவார்த்தையின் மூலம் கடந்த சில நாட்களாக அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, அநாயசமாக பலவற்றை புரிந்து கொண்டு ரியாக்ட் செய்கிறாராம். தன் மனைவியால்தான் கட்சி இன்று இப்படியொரு இக்கட்டில் சிக்கிக் கொண்டுள்ளது என்று குடும்பத்தின் மிக நெருக்கமான உறவுகளிடம் வருத்தமே பட்டுவிட்டாராம். வாரிசு அரசியல்! மச்சான் கட்சி! எனும் விமர்சனம் வந்தாலும் கவலையில்லைன்னு பிரேமலதாவையும், சுதீஷையும் கொண்டாந்தேன் கட்சிக்குள்ளே. ஆனா ரெண்டு பேரும் சேர்ந்து நான் உருவாக்கி வெச்சிருந்த மதிப்பை உடைச்சு நொறுக்கிட்டாங்க. vijayakanth upset...

அம்மன் கோயில் கிழக்காலே படத்துல ‘மூணு முடிச்சாலே முட்டாளா ஆனேன்...’ன்னு நான் சும்மா பாடியது இன்னைக்கு எனக்கு நெசமாகிடுச்சு! என்று திக்கித் திணறி வருந்தினாராம் விஜயகாந்த். வழக்கமாக தன்னை தன் கட்சி நிர்வாகிகளும், மீடியாக்களும்தான் விமர்சிப்பார்கள், ஆனால் இந்த முறையோ ஒரு தாய் போலிருந்து தான் தேற்றிப் பராமரிக்கும் கணவரே இப்படி பேசியதில் பிரேமலதாவுக்கு பெரிய ஷாக்.  அக்கா - மச்சானே அரசியல் உலகம் என்றிருக்கும் சுதீஷோ துரைமுருகன் தந்த அதிரடி ட்ரீட்மெண்ட் மற்றும்  ‘டபுள் கேம் ஆடுறீங்களா?’ என்று அ.தி.மு.க - பி.ஜே.பி. நடத்திய பாய்ச்சலால் சுத்தமாக சுருதி இழந்து கிடக்கிறார். அய்யோ பாவம்யா கேப்டன்!

Follow Us:
Download App:
  • android
  • ios