திமுக கூட்டணியில் தேமுதிக..? உறுதிப்படுத்திய திருநாவுக்கரசர்..! அதிமுகவுக்கு அல்வா..!
தேமுதிக திமுக கூட்டணியில் இணைய விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளது அதிமுக கூட்டணியினரைடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேமுதிக திமுக கூட்டணியில் இணைய விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளது அதிமுக கூட்டணியினரைடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தை சற்று நேரத்துக்கு முன்பு நேரி சென்று சந்தித்தார் திருநாவுக்கரசர். பின்னர் வெளியே வந்த அவர், தே.மு.தி.க துணை செயலாளரும் விஜயகாந்த்தின் மைத்துனருமான எல்.கே.சுதீஷுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய திருநாவுக்கரசர், ’’விஜயகாந்த்துடன் அரசியல் குறித்து பேசினோம். கடந்த நான்கரை ஆண்டுகளாக நாட்டில் நடக்கும் பிரச்னைகளை பற்றி அவரும் அறிந்திருக்கிறார். ஆகையால் எங்கள் கோரிக்கைகளை ஒதுக்காமல் கேட்டுக் கொண்டார். நல்ல முடிவை எடுப்பதாக அவர் கூறியுள்ளார்’’ என திருநாவுக்கரசர் கூறினார்.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிகவுடன் கடந்த இரண்டு தினங்களாக பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் நிலையிலும் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் ப்யூஸ் கோயல், முரளிதர ராவாகியோர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்த பின் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தங்களுக்கு 9 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என விஜயகாந்த் மனைவி பிரேமலதா பிடிவாதம் காட்டியதால் முடிவை எட்ட முடியவில்லை.
அதிமுக தரப்பு 5 தொகுதிகளை தேமுதிகவிற்கு ஒதுக்க முன் வந்துள்ளது. ஆனால், பாமகவுக்கு வடமாவட்டங்களில் மட்டுமே செல்வாக்கு உள்ளது. அத்தோடு சாதி கட்சி என்கிற முத்திரையும் உள்ளது. எங்களது கட்சிக்கு தமிழகம் முழுவதும் தொண்டர்கள் உள்ளனர். பாமகவை விட அதிக வாக்கு வங்கியை வைத்துள்ள எங்களுக்கு பாமகவுக்கு ஒதுக்கியதை விட கூடுதல் இடம் ஒதுக்க வேண்டும் என தேமுதிக பிடிவாதம் காட்டி வருகிறது. அடுத்தடுத்து நடந்த பேச்சுவார்த்தையில், இரண்டு தொகுதிகளை விட்டுக் கொடுத்து பாமகவுக்கு ஒதுக்கியதைப் போல 7 தொகுதிகள் ஒரு ராஜ்யசபா சீட் கேட்டு வருகிறது தேமுதிக. அதற்கும் குறைவான சீட்டுக்களை ஒதுக்கினால் பேச்சுவார்த்தைக்கே வரவேண்டாம் என கறாராக கூறி வருகிறார் பிரேமலதா.
இதனால் அதிமுக ஒட்டுமொத்த கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இயலாமல் திணறி வருகிறது. இந்நிலையில் தேமுதிகவுக்கு இருக்கும் ஓட்டு வங்கியை சிதறவிடாமல் கைப்பற்ற திட்டமிட்ட திமுக தங்களது கூட்டணிக்கு தேமுதிகவை இழுத்து வர திட்டமிட்டு வருகிறது. இதனிடையே திருநாவுக்கரசர் விஜயகாந்த் சந்திப்பு அதிமுக பாஜக வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.