தொண்டர்களுடன் திருமண தினத்தைக் கொண்டாடிய கேப்டன்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது 28-வது திருமண திணத்தைக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் கொண்டாடியுள்ளார். விஜயகாந்த் - பிரேமலதா விஜயகாந்த்துக்கு தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, தேமுதிக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையை அடுத்த பல்லாவரத்தில் தேமுதிக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். முன்னதாக, ஆலந்தூர் வந்த விஜயகாந்த், அங்கிருந்து பல்லாவரத்துக்கு மாநகர பேருந்தில் சென்று, போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது உடன் வந்த தொண்டர்களுக்கும் அவரே டிக்கெட் எடுத்திருந்தார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று கூறப்படும் நிலையில், தேமுதிக தனித்து போட்டியிடும் என்றும் விஜயகாந்த் கூறியிருந்தார்.
இந்த நிலையில், விஜயகாந்த் - பிரேமலதா விஜயகாந்தின் 28-வது திருமண நாள் இன்று கொண்டாடப்பட்டது. தனது 28-வது திருமண நாளை கழக நிர்வாகிகள், தொண்டர்களுடன் கொண்டாடி உள்ளார்.
28-வது திருமண தினம் கொண்டாடப்பட்டது குறித்து விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், 28-வது திருமண நாளான இன்று கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், சார்பு அணியினர், மகளிர் அணியினர், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் ஆகிய அனைவரும் எங்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் என்று விஜயகாந்த் அதில் பதிவிட்டுள்ளார். மேலும், தொண்டர்களுடன் தம்பதி சமேதராக எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் விஜயகாந்த்.