vijayabaskar warning edappadi palanisamy
தமது அமைச்சர் பதவியில் கைவைத்தால், ஆட்சியே கலைந்து விடும் என்று முதல்வர் எடப்பாடிக்கு, அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசு கொடுத்து வரும் நெருக்கடியில் இருந்து தப்பிக்க, அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என்று மூத்த அமைச்சர்கள் பலரும், முதல்வர் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, சசிகலா குடும்ப உறவினர்களும் தினகரனை நச்சரித்து வருகின்றனர். ஆனால், அவர் கொஞ்சம் பொறுமை காக்கும்படி கூறி வருகிறார்.
விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கிய ஆவணங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மணல் மன்னன் சேகர் ரெட்டியிடம் வாங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஏழு அமைச்சர்களை கைது செய்ய முடியும் என்று வருமானவரி துறை கூறுகிறது.

ஏற்கனவே, தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் வீட்டில் ரைடு நடந்தபோது, வருமான வரித்துறை அதிகாரிகள் தலைமைச் செயலாளர் அலுவலகத்திலும் நுழைந்து விட்டனர்.
அதே போல், முதலமைச்சர் அலுவலகத்திலும் நுழைந்து வருமான வரி துறையினர் சோதனை நடத்தி விடுவார்களோ என்ற அச்சத்தில் இருக்கிறார் எடப்பாடி.
அதன் காரணமாகவே, மத்திய அரசின் கோபத்தை தணிக்கும் வகையில், தளவாய் சுந்தரம், அமைச்சர்கள் காமராஜ், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகோயோர் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருந்தாலும், விஜயபாஸ்கரை அமைச்சரவையில் இருந்து நீக்காதவரை, தொடர்ந்து நெருக்கடி இருக்கும் என்று தகவல் வந்ததால், முதல்வர் எடப்பாடி தரப்பில் இருந்து, விஜயபாஸ்கரை தொடர்புகொண்டு சிலர் பேசியுள்ளனர்.
அதனால், ஆத்திரம் அடைந்த விஜயபாஸ்கர், என்னை நீக்கும் அளவுக்கு தைரியம் வந்துவிட்டதா? என அவர்களிடம் கொந்தளித்து இருக்கிறார்.
கூவத்தூரில் எம்.எல்.ஏ க்களை எப்படி பாதுகாத்தேன்? என்று உங்களுக்கே நன்றாக தெரியும். அவர்களில் 15 எம்.எல்.ஏ க்களின் பட்டியலை இப்போது தருகிறேன். அவர்களிடம் பேசிப்பாருங்கள். என்னை மீறி அவர்கள் யார் பக்கமும் போகமாட்டார்கள்.

தைரியம் இருந்தால், என்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி பாருங்கள். அதன் பிறகு உங்கள் ஆட்சி கவிழும் என்பதை உணருவீர்கள் என்றும் காட்டமாக பேசியுள்ளார் விஜயபாஸ்கர்.
அதனால், அவரை சமாளிக்க முடியாமல் எடப்பாடி தரப்பில் பேசியவர்கள் திணறி உள்ளனர்.
அதையடுத்து, மத்திய அரசின் நெருக்கடியை சமாளிக்க முடியாமலும், விஜயபாஸ்கரை சமாதானம் செய்ய முடியாமலும் தவித்து வருகிறார் எடப்பாடி.
