விஜய் பேசுவதை பெரிதாக எடுத்துக்கக்கூடாது... பொன்.ராதாகிருஷ்ணன் பதிலடி..!
விஜய் பேசியதை பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை என முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜயின் அரசியல் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. “இருக்க வேண்டியவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும். சரியானவர்களை சரியான இடத்தில் அமர வைக்க வேண்டும்” எனத் தெரிவித்து இருந்தார். அதிமுக ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொன்.ராதாகிருஷ்ணன், “நமது நாட்டின் ஒரு அங்கமாக விளங்கிக் கொண்டிருக்கும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டு இருந்த நிலையை மாற்றி, ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக காஷ்மீரை பிரதமர் மோடி மாற்றியிருக்கிறார். நாடு முழுவதும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை இதன் காரணமாக அகற்றி இருக்கின்றோம்.
வருகின்ற அக்டோபர் 2-ஆம் தேதி முதல் நாடு முழுவதிலும் இருக்கக்கூடிய மக்களை சந்தித்து அவருடைய கொள்கைகளை விவரிக்கும் வகையில் பாத யாத்திரைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. 15 நாட்கள் தினசரி 10 கிலோ மீட்டர் இந்த பாதயாத்திரை நடைபெறும். இந்தி எதிர்ப்பு எனக் கூறிக்கொண்டு மக்களை திசை திருப்பி சிலர் அரசியல் ஆதாயம் தேடி வருகின்றனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியை அனைத்து மாநிலங்களிலும் திணிக்கக் கூடாது என சிதம்பரம் கூறுவதில் ஆச்சரியமில்லை. அவர் உள்துறை அமைச்சராக இருந்தபோது காங்கிரஸ் இந்தியை கொண்டுவர முயன்று தோற்று போனது. அதன் வெளிப்பாடே இந்த வார்த்தைகள். நடிகர்கள் கூறும் கருத்துகளை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை, அவர்களும் நாட்டின் குடிமக்களே. நடிகர் விஜய் பேசியதை பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை.
மக்கள் நீதி மையத்தின் சார்பில் எத்தனை பேனர்கள் வைக்கப்பட்டது? திரைப்படத்துறையில் எத்தனை பேனர்கள் வைக்கப்பட்டது? இறந்தகாலத்தில் நடந்தவற்றைக் கூறி யாரும் ஒருவரை ஒருவர் மூக்கறுத்து கொள்ள வேண்டாம். எந்தக் கட்சியாக இருந்தாலும் ஒரு கட்அவுட் ஒரு பேனர் கூட வைக்க அனுமதிக்கக் கூடாது. எந்த ஒரு கோவில், மசூதி மற்றும் சர்ச் நிகழ்ச்சியில் பேனர் வைக்க கூடாது.
மத்திய அரசு பணியிடங்கள் முதல் தனியார் பணியிடங்கள் வரை தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதே எனது விருப்பம்” என அவர் தெரிவித்தார்.