கிளம்பிட்டாரு டோய்... அரசியல் ஆட்டத்துக்கு வரும் விஜய்... உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் ரசிகர்கள்..!
விஜய் அரசியல் ஆசை இப்போதும் எட்டிப்பார்த்து இருக்கிறது. தனது ஒவ்வொரு பட விழாவின்போதும் அரசியல் பேசும் விஜய், அரசியலுக்கு இதோ வருகிறார்... அதோ வருகிறார் என பரபரப்பு கிளம்பும்.
விஜய் அரசியல் ஆசை இப்போதும் எட்டிப்பார்த்து இருக்கிறது. தனது ஒவ்வொரு பட விழாவின்போதும் அரசியல் பேசும் விஜய், அரசியலுக்கு இதோ வருகிறார்... அதோ வருகிறார் என பரபரப்பு கிளம்பும். இந்த நிலையில், 9 மாவட்டங்களுக்கு நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈ.சி.ஆர் ரோட்டில் பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை புஸ்ஸி ஆனந்த் நேற்று சந்தித்து பேசியுள்ளார். அங்கு தேர்தல் நடைபெறும் 9 மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட பல்வேறு மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது, 9 மாவட்டங்களில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சுயேட்சையாக போட்டியிட்டுக் கொள்ளலாம் என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் விஜய் மக்கள் இயக்கத்தினர் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் பேசுகையில், ’’ஏற்கெனவே நடந்த உள்ளாட்சி தேர்தலில் எங்களின் இயக்கத்தினர் சுயேட்சையாக போட்டியிட்டு இருக்கிறார்கள். அதில், வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். எனவே, இந்த முறையும் போட்டியிட இருக்கின்றனர் என்று கூறினர்.
விரைவில் தளபதி விஜய் அரசியல் பிரவேசம் காண்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தினர் இதுபோன்று தேர்தல்களில் போட்டியிடுவது, முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அவர் அரசியல் களம் காணலாம் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.