viajyabaskar talks about neet exemption

தமிழகத்துக்கு நீட் தேர்வு ஓராண்டுகால விலக்கு குறித்து, அரசின் சட்ட முன் வடிவு, காலதாமதமின்றி நாளை மத்திய அரசிடம் வழங்கப்படும் என்றும் நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு எதையும் எதிர்மறையாக கூறவில்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிப்பது குறித்து தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் ஓராண்டுக்கு விலக்களிக்கப்படும் என்றும், நிரந்தர விலக்கு என்பது கிடையாது என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். 

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

மேலும், நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்கு என்பது தமிழக அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக மாணவர்களுக்கு ஆறுதலும், மகிழ்ச்சியையும் அளித்த பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கு, தமிழக அரசு சார்பில் நன்றி தெரிவித்தார். மத்திய அரசு நல்ல அறிவிப்பை அறிவித்துள்ளது என்று கூறினார்.

தமிழகத்துக்கு நீட் ஓராண்டுகால விலக்கு குறித்து, தமிழக அரசின் சட்ட முன் வடிவு, காலதாமதமின்றி நாளை காலை 10 மணியளவில் மத்திய அரசிடம் வழங்கப்படும் என்றார்.

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு எதையும் எதிர்மறையாக கூறவில்லை என்றும் அமைச்சர் கூறினார். தமிழகத்துக்கு நீட் தேர்வு ஓராண்டு விலக்கு அளிக்கும்போது சட்ட சிக்கல் ஏற்படக்கூடாது என்று மத்திய அரசு உறுதியாக இருந்தது.

கடந்த ஆண்டு நடைபெற்றது போலவே, தமிழகத்தில் இந்த ஆண்டும் மருத்துவ சேர்க்கை நடைபெறும் நம்பிக்கை உள்ளதாக கூறினார்.

நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்த ஆண்டு குழப்பம் ஏற்படாத வகையில் தமிழக அரசு உறுதியான முடிவெடுக்கும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.