"ஆட்சியை கலைக்க பார்க்கிறார் ஸ்டாலின்" - அமைச்சர் வேலுமணி சாடல்!!
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தில் குறுக்குவழியில் ஆட்சியைக் கைப்பற்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சிப்பதாகவும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலமையிலான அரசு நடைபெற்று வருகிறது. அவரின் ஆட்சியில் குறை கூறி அதிமுகவை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் வரும் 10 தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளார்.
இதனிடையே எடப்பாடி தலமையிலான அரசை குறை கூறி ஆட்சியை கலைக்க திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்துவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தில் குறுக்குவழியில் ஆட்சியைக் கைப்பற்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 100 நாட்களில் 2000 கோப்புகளில் கையெழுத்திடப்பட்டு திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வறட்சியை சிறப்பாக சமாளிக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.