திமுக கூட்டணி வெற்றி பெறப்போவதை தாங்க முடியாமல் தமிழகத்தைச் சீர்குலைக்க சதி.. திருமாவளவன் பகீர் புகார்..!
விசிக இடம்பெற்றுள்ள திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றி பெறப்போவதைத் தாங்க முடியாதவர்கள் தமிழ்நாட்டைச் சீர்குலைக்க மிகப்பெரிய சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளனர் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரக்கோணம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட சோகனூரில் அர்ஜுனன், சூரியா ஆகிய இரண்டு தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலைகளைச் செய்தவர்களை உடனடியாகக் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இந்தப் படுகொலைகளைக் கண்டித்து ஏப்ரல் 10 அன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
வாக்குப்பதிவு முடிந்ததற்குப் பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் தலித்துகள் தாக்கப்பட்டுள்ளனர். காட்டுமன்னார்கோவில், வானூர், திருப்போரூர், கிருஷ்ணகிரி மற்றும் அரியலூர் தொகுதிகளிலும்கூட தலித்துகளுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்ந்துள்ளன. விசிக இடம்பெற்றுள்ள திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றி பெறப்போவதைத் தாங்க முடியாதவர்கள் தமிழ்நாட்டைச் சீர்குலைக்க மிகப்பெரிய சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளனர் என்பதன் அடையாளமே இந்தப் படுகொலைகள்.
இத்தகைய சூழலில், இதனை வன்மையாகக் கண்டித்துக் குரலெழுப்ப வேண்டுமென அனைத்து ஜனநாயக சக்திகளையும் அறைகூவி அழைக்கிறோம்” என்று அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.