கணுக்கால் அளவு தண்ணீரில் படகில் ஷூட்டிங் போன அண்ணாமலை…! போட்டு தாக்கும் வன்னியரசு….
கணுக்கால் அளவு தண்ணீரில் படகில் போய் ஷூட்டிங் எடுத்தவர் அண்ணாமலை என்று விசிகவின் வன்னிஅரசு போட்டு தாக்கி இருக்கிறார்.
கணுக்கால் அளவு தண்ணீரில் படகில் போய் ஷூட்டிங் எடுத்தவர் அண்ணாமலை என்று விசிகவின் வன்னிஅரசு போட்டு தாக்கி இருக்கிறார்.
சென்னையில் மீண்டும் மக்களின் தூக்கத்தையும், உடமைகளையும் மழை பாழ்படுத்தி வருகிறது. இடைவிடாது கொட்டித் தீர்க்கும் கனமழையால் நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து, மக்கள் படகுகளில் பயணம் செய்யும் காட்சிகள் அரங்கேறி இருக்கின்றன.
சென்னையின் முக்கிய சாலைகளில் பயணிக்கலாமா? எந்தெந்த சாலைகளில் போகலாம், போகக்கூடாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மழை பாதிப்பு, வீடுகளில் வெள்ளம், வாகனங்கள் சேதம் என மக்களின் அன்றாட வாழ்க்கை கடும் பாதிப்பில் இருக்கிறது.
சென்னை மக்களின் நிலைமை இப்படி தண்ணீரில் தத்தளிக்க அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் மழை, வெள்ளத்தில் அரசியல்வாதிகளின் வீடுகள், இருப்பிடங்களும் தப்பவில்லை.
இப்படித்தான் சென்னை வேளச்சேரியில் பெய்த மழையால் அந்த பகுதி வெள்ளக்காடானது. சாலைகள் எங்குமே தெரியாத அளவுக்கு நிரம்பிய மழைநீர் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்தது. கேப் விடாமல் அடித்து நொறுக்கும் மழையால் பல வீடுகளின் முதல் தளம் தண்ணீரால் நிரம்பியது.
சென்னையில் மழை, படகில் பயணம் என தினுசு, தினுசாக வீடியோக்கள் வலம் வந்து கொண்டிருந்த தருணத்தில் திருமாவளவன் பற்றிய வீடியோ ஒன்றும் வைரலாகியது.
வேளச்சேரியில் உள்ள திருமாவளவன் வீட்டில் தண்ணீர் உட்புகுந்தது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க டெல்லி செல்ல வேண்டி இருந்ததால் கால் நனையாமல் இருக்க உடனடியாக தொண்டர்கள் ஒரு காரியம் செய்தனர். பார்வையாளர்களுக்காக போடப்பட்டு இருந்த இரும்பு சேர்களை ஒவ்வொன்றாக இழுத்து பாதையாக மாற்றி தர…அதில் கால் நனையாமல் திருமாவளவன் நடந்து, தாவி சென்று காரில் ஏறினார்.
இந்த வீடியோ இணையத்தில் பதிவாகி எட்டுத்திக்கும் ரவுண்டு அடிக்க… வீடியோவை பார்த்த விசிகவினர் மகிழ்ந்தாலும், பாஜகவோ கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தது.
சமூக நீதி, சமத்துவம் இதெல்லாம் எங்கே போச்சு…? என்று டுவிட்டரை போட்டு அதகளம் பண்ணினர். மழைநீர் காலில் பட்டால் என்னவாகி விட போகிறது? என்று கேள்விகளினால் துளைத்தெடுத்தனர்.
வீடியோ விவகாரம் வேறு தளத்தை நோக்கி நகர்ந்து போவதை அறிந்த விசிகவினர் திருமாவளவன் காலில் புண்,சிகிச்சையில் உள்ளார் என்று விளக்கம் கொடுத்துக் கொண்டு இருந்தனர்.
தொடர்ந்து விமர்சனங்கள் வந்து விழுந்து கொண்டே இருக்க அக்கட்சியின் வன்னி அரசு டுவிட்டரில் ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:
வேளச்சேரியில் மருதம் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் உள்ள ஓர் அறையில் தான் எமது தலைவர் கடந்த15 ஆண்டுகளாக தங்கி வருகிறார்.கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த மழையில் எப்படி கீழ்த்தளம் முழுக்க தண்ணீர் புகுந்ததோ,அப்படி தான் இந்த ஆண்டும்.
ஒரு தலைவர் நினைத்தால் சொகுசு ஓட்டலில் கூட தங்கலாம்.ஆனால் அதையெல்லாம் விடுத்து தம்பிகளோடவே தங்குகிறார்.முழங்கால் அளவு தண்ணீரில் தலைவர் நடக்கக்கூடாது என்பதற்காக நாற்காலிகளை போட்டு உதவுகிறார்கள் தம்பிகள்.
இது கூட பொறுக்க முடியாத அரசியல் வன்மத்தர்களும் அறிவு பலவீனமானவர்களும் கிண்டலும் கேலியும் செய்கிறார்கள் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அதேநேரத்தில் விமர்சிக்கும் பாஜக உள்ளிட்டோரையும் வறுத்தெடுத்து உள்ளார் வன்னி அரசு. இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள மற்றொரு டுவிட்டர் பதிவில் அண்ணாமலையை கண்டித்து இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
கனுக்கால் அளவு தண்ணீரில் படகில் சென்று சூட்டிங் எடுத்த @annamalai_k வகையறாக்கள் தான் அந்த வன்மத்தர்கள்.தமிழ்நாட்டில் தலைவர்கள் வசிக்கும் மாட மாளிகைகளுக்குள் தண்ணீர் போக முடியாது.இப்படி அன்னாடங்காய்ச்சிகளின் தலைவர் @thirumaofficial வசிப்பிடத்தின் நிலை இது தான் என்று கூறி உள்ளார்.