மகனுக்காக பலிவாங்கும் படலத்தை ஆரம்பித்த வைகோ... திகிலில் மறுமலர்ச்சி திமுக..!
இப்படி வைகோ நெருக்கடி கொடுத்து வருவதால் அதிருப்தியில் உள்ள பலரும் அதிமுகவுக்கு கட்சி தாவக்கூடும் என்கிறார்கள்.
வைகோ தனது மகனுக்கு மகுடம் சூட்டிய நிகழ்வில், மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கலந்துகொள்ளாத விஷயம், மதிமுகவுக்குள் பிரதானமாக விவாதிக்கப்படுகிறது. வைகோவின் வாரிசு அரசியலை கொங்கு மண்டலத்தில் உள்ள மதிமுக நிர்வாகிகள் சிலர் எதிர்க்கிறார்கள். அவர்களால் இதைப்பற்றி வெளிப்படையாகபேசமுடியவில்லை. ஆனால், தனது எதிர்ப்பைக் காட்டும்விதமாக துரைசாமி அந்த நிகழ்வை புறக்கணித்துவிட்டார் என்கிறார்கள்.
அதேசமயம், கட்சிக்குள் ஒரு சிறிய வட்டத்தினர் கிளப்பும் இந்த எதிர்ப்பை மதிமுக தலைமை பெரிதாக எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது. அதிருப்தியில் இருக்கும் மதிமுகவினர் திமுக அல்லது அதிமுகவுக்குப் போகக்கூடும் என்ற பேச்சும் இருக்கிறது. அப்படி கட்சி மாறக்கூடியவர்கள் பட்டியலில், திருப்பூர் துரைசாமியின் பெயரை பிரதானமாகச் சொல்கிறார்கள்.
வைகோ மகனுக்கு மகுடம் சூட்டும் விழாவில், மாவட்டச் செயலாளர் திருவள்ளூர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், திண்டுக்கல் செல்வராகவன், புதுக்கோட்டை சந்திரசேகர், சிவங்கை புலவர் செவந்தியப்பன், திருப்பூர் ஆர்.பி. மாரியப்பன் நாமக்கல் டி.என்.குருசாமி, விருதுநகர் ஆர்.எம்.சோமசுந்தரம், காஞ்சி வளையாபதி, நாகை ஏ.எஸ்.மோகன் ஆகியோர் கூட்டத்துக்கு வரவில்லை என்றும் கூறுகிறார்கள்.
மல்லை சத்யா தனது அதிருப்தியை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். இதுவரை மல்லை சத்யா, துரை வைகோவின் வருகையை ஆதரித்துப் பேசவில்லை. சமூக வலைதளத்தில் எழுதவில்லை. செய்தியாளர்கள் கேட்டும் பேட்டிக்கு ஒப்புக்கொள்ளவில்லை.
கோவை மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர். மோகன் குமார் கூட்டத்தில் கலந்துகொண்டு, துரை வைகோவுக்குப் பொறுப்பு அளிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை எனக் கூறி வெளிநடப்பு செய்துவிட்டார். துரை வைகோவை கட்சிக்குள் திணிப்பதில் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமிக்கு உடன்பாடு இல்லை. ஆகவே அவர் அன்று நடந்த கூட்டத்தைப் புறக்கணிப்பு செய்துவிட்டார்.
இந்த நிலையில்தான் துரைக்கு ஆதரவு கடிதம் தராத நிர்வாகிகளின் கட்சி பதவிகளை பறிக்கும் படலத்தை ஆரம்பித்து இருக்கிறது அக்கட்சி தலைமை. முதல் கட்டமாக, நாமக்கல் மாவட்டச் செயலர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. ஆதரவு கடிதம் தராதவர்களிடம் துரைக்கு ஆதரவு கடிதம் கேட்டு, நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதாக கூறுகிறார்கள்.
இதையும் படியுங்கள்:-பதவியேற்றதும் துரை வைகோ எடுத்த அதிரடி... இரட்டிப்பு மகிழ்ச்சியில் வைகோ..!
ம.தி.மு.க., உயர்நிலை குழு உறுப்பினரும், நாமக்கல் மாவட்டச் செயலருமான டி.என்.குருசாமி, 20ம் தேதி கூட்டத்திற்கு வரவில்லை. இதனால், அவரிடமிருந்த மாவட்டச் செயலர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரிடம் உயர்நிலை குழு உறுப்பினர் பதவி மட்டும் உள்ளது. இது குறித்து, வைகோ வெளியிட்ட அறிக்கையில், 'நாமக்கல் மாவட்டம், கட்சி நிர்வாக வசதிக்காக, நாமக்கல் கிழக்கு, மேற்கு என இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.'கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக எஸ்.சேகர், மேற்கு மாவட்ட பொறுப்பாளராக கே.கே.கணேசன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்' என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்:- சசிகலாவுக்கு ஆதரவாக ஓ.பி.எஸை தூண்டுவதே எடப்பாடியார்தான்... அதிமுகவுக்குள் நடக்கும் கும்மாங்குத்து..!
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரிடம், துரைக்கு ஆதரவாக கடிதம் கேட்டு நெருக்கடி தரப்பட்டுள்ளது. ஆனால், அவர் தரப்பில் ஆதரவு கடிதம் தர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் ராஜினாமா கடிதம் கொடுக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
இப்படி வைகோ நெருக்கடி கொடுத்து வருவதால் அதிருப்தியில் உள்ள பலரும் அதிமுகவுக்கு கட்சி தாவக்கூடும் என்கிறார்கள்.