பதவியேற்றதும் துரை வைகோ எடுத்த அதிரடி... இரட்டிப்பு மகிழ்ச்சியில் வைகோ..!
நான் வலதுசாரி சிந்தாத்திற்கு எதிராக அனைவரையும் ஒன்றிணைக்கும் அரசியலை முன்னெடுப்பேன் என சூளுரைத்துள்ள துரை வைகோவுக்கும் பயணத் திட்டம் உருவாக்கப்படுகிறது.
மகன் அரசியலுக்கு வருவதில் தனக்கு விருப்பமில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த வைகோ, உண்மையில் இப்போது இரு மடங்கு மகிழ்ச்சியில் இருக்கிறார்.
காரணம் மகன் துரை வைகோ எடுத்துள்ள முடிவு அப்படி. வைகோ தனக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் நடைபயணத்தைத் தொடங்கி விடுவார். தற்போது, அவரது மகன் துரையும் அதே பாணியில் பயணத் திட்டத்தை மேற்கொள்ள திட்டம் வகுத்து வருகிறார்.
நான் வலதுசாரி சிந்தாத்திற்கு எதிராக அனைவரையும் ஒன்றிணைக்கும் அரசியலை முன்னெடுப்பேன் என சூளுரைத்துள்ள துரை வைகோவுக்கும் பயணத் திட்டம் உருவாக்கப்படுகிறது. ஆனால், நடைபயணம்போல் திட்டமிடாமல் வாகன வழிப் பயணமாக இதை வடிவமைப்பதாக மதிமுக தரப்பில் கூறுகிறார்கள். இதன்படி விரைவிலேயே மதிமுக தொண்டர் தரிசன யாத்திரையைத் தொடங்க இருக்கிறார் துரை வைகோ. இந்தப் பயணத்தின்போது முக்கிய சாலைகளை மட்டும் கடக்காமல், ஒன்றிய அளவில் குக்கிராமம் வரை சென்று மதிமுக நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசுவார் துரை என்கிறார்கள்.
வைகோ மீது அபிமானம் கொண்டிருந்தாலும், இப்போது அரசியல் நடவடிக்கைகளை விட்டு ஒதுங்கி இருக்கும் மதிமுகவின் பழைய நிர்வாகிகளை எல்லாம் தேடிப் போய் சந்தித்து, அவர்களை மீண்டும் மதிமுகவுக்கு திருப்புவது, இந்தப் பயணத்தில் துரையின் முக்கிய திட்டம். அதேபோல், கிராம அளவில் புதிய இளைஞர்களையும் மதிமுகவுக்கு கொண்டுவந்து கட்சிக்கு புதிய எழுச்சியை உண்டாக்குவதும் இந்தப் பயணத்தின் நோக்கம் என்கிறார்கள் மதிமுகவினர்.
இப்படி தடபுடலாக ஒருபுறம் துரை வைகோ தயாராகிக் கொண்டிருக்க, அவருக்கு பதவி கொடுக்கப்பட்டதில் ம.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் உள்ளதாலேயே, தலைமைக் கழக கூட்டத்தை அவர்கள் புறக்கணித்துள்ளதாகத் தெரிகிறது. `வரும் நாள்களில் பெரும் பூசலாகவும் இது வெடிக்கலாம்' என்கின்றனர் ம.தி.மு.க நிர்வாகிகள்.