வைகோ – திருமா மோதல் !! பின்னணியில் யார் தெரியுமா ?
வைகோ – திருமா மோதலில பின்னணியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் வேலுமணி ஆகியோர் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவை பக்கமுள்ள ஒரு தொழிலதிபர் மூலம் இந்த உடைப்பு வேலை நடைபெற்று வருவதாக விவரமறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
வைகோவுக்கும் வன்னியரசுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் மற்றும் அதை ஒட்டி திருமாவளவன் மீது வைகோ காட்டிய கோபம் ஆகியவைதான் தமிழகத்தில் இன்றைய ஹாட் டாபிக்.
வைகோ குறித்த தனது கருத்துக்கு வன்னயரசு வருத்தம் தெரிவித்து விட்டார். திருமாவளவனும் இதற்காக வருத்தம் தெரிவித்ததுடன், வன்னியரசை கண்டித்துவிட்டதாகவும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் .
ஆனாலும் வைகோ இதை விடுவதாக இல்லை. திருமாவளவன் இப்பிரச்சினையை முடித்து வைத்துவிட்ட நிலையில், மீண்டும் வைகோ ஆரம்பித்து வைத்திருக்கிறார். மதிமுகவில் இருந்து வன்னி அரசுக்கு பதில் தெரிவித்து ஒரு நீண்ட அறிக்கை, ‘ஈழ வாளேந்தி’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இந்த ஈழ வாளேந்தி வேறு யாருமல்ல வைகோதான் என்கிறார்கள்
இந்த அறிக்கையைப் படித்ததும் ஸ்டாலின் , ‘ஏன் வைகோ இப்படி மீண்டும் மீண்டும் அதை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு என்ன ஆயிற்று?’ என்று கேட்டிருக்கிறார். திருமாவளவனிடமும் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
வன்னியரசு வைகோவுக்கு போன் செய்து பார்த்தும் அவரது உதவியாளர் பிரசாந்த் தான் ஃபோனை எடுத்திருக்கிறார். ஆனால் வைகோ பேச வில்லை. இதனால் அவரிடமே வருத்தம் தெரிவித்து விட்டிருக்கிறார் வன்னியரசு.
இந்த நிலையில் வைகோ மீண்டும் இப்பிரச்னையை கிளப்புவதன் மூலம் கூட்டணிக்குள் ஏதேனும் குழப்பம் ஏற்படுத்த முயல்கிறாரோ என்று சந்தேகப்படுகிறாராம் ஸ்டாலின். ஏற்கனவே அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான தொழிலதிபர் மூலமாக வைகோவுடன் எடப்பாடி பழனிசாமி பேசிவருவதாகவும் ஸ்டாலினுக்கு தகவல்கள் கிடைத்திருக்கிறது.
இதையடுத்து கூட்டணித் தலைவர்களை ஸ்டாலின் தனித்தனியாக போனில் தொடர்பு கொண்டு கூட்டணியின் நிலைத் தன்மை குறித்து பேசி வருகிறார் என கூறப்படுகிறது. திமுக கூட்டணியை எப்படியாவது உடைத்துவிட வேண்டும் என எடப்பாடி நினைப்பதன் விளைவே வைகோ – திருமா மோதல் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.