vaiko says that he likes prison
கடந்த 2009 ஆம் ஆண்டு நான் குற்றஞ்சாட்டுகிறேன் நூல் வெளியீட்டு விழாவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.
அப்போது அவர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறி அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த மூன்றாம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, தேசத் துரோக வழக்கை விரைந்து முடியுங்கள், அல்லது சிறைக்குச் செல்கிறேன் என்று வைகோ தெரிவித்தார்.
இதனையடுத்து அவரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இரண்டு முறை இவ்வழக்கில் ஜாமீனில் செல்லும்படி நீதிமன்றமே வலியுறுத்தியும் வைகோ தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார். இந்தச் சூழலில் 51 நாட்கள் சிறையில் இருக்கும் தனக்கு ஜாமீன் அளிக்கும் படி வைகோ தரப்பில் திடீரென பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த 4 ஆவது அமர்வு நீதிமன்ற நீதிபதி புருஷோத்தமன், எவ்வித நிபந்தனையும் விதிக்காமல், சொந்த ஜாமீனில் வெளியே செல்ல அனுமதி வழங்கினார்.
வெளியே வந்ததும் மைக் பிடித்த வைகோ தனக்கு பிடித்த இடமே சிறை தான் என்றும், இயக்கத்தை மேலும் வலுப்படுத்த இந்தச் சிறைவாசம் உதவியதாகவும் கூறியிருந்தார். இந்தப் பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்சுகளாக மாறி வைகோவை செமயாக கலாய்த்த நிலையில் மீண்டும் இதே டயலாக்கை தட்டி விட்டிருக்கிறார் அவர்.
கட்சி நிர்வாகி ஒருவரது இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட அவர், "இனி தமிழகத்தில் இருந்து கேராளவுக்கு மாடுகளை கடத்த முடியாது. அனைத்து தரப்பு மக்களிடம் கருத்து கேட்ட பின் விதிகளை திருத்த வேண்டும்.கொள்கை ரீதியாக தமிழகத்தில் வலிமையான இயக்கம் என்றால் மதிமுக தான்.டாஸ்மாக் கடைக்கு எதிராக முதலில் குரல் கொடுத்தவன் நான் தான்."
"இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என்ற உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மாட்டிறைச்சி மீது மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது. மூன்று ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் இல்லாததை வரவேற்கிறேன். பாலில் கலப்படம் இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தாமாகவே முன்வந்து அதனை நிரூபிக்க வேண்டும். ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை."இவ்வாறு பல்வேறு பிரச்சனைகள் குறித்து வைகோ பேசினார்
