vaiko request to TN govt that dont approve methane project
கதிராமங்கலம் மீத்தேன் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் தரக் கூடாது என ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், கதிராமங்கலம் கிராமத்தில், 2000 ஆம் ஆண்டில், ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க ஆழ்குழாய் கிணறு அமைத்தது.
அங்கிருந்து எடுக்கப்படுகின்ற எரிகாற்று, குழாய் வழியாக குத்தாலம் மையத்திற்கு அனுப்பப்படுகின்றது.
இதையடுத்து ஓஎன்ஜிசி நிறுவனம் கதிராமங்கலத்தில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான பணியை தொடங்க ஆரம்பித்ததால் கடந்த மே19 ஆம் தேதி, அப்பகுதி மக்கள் குழாய் அமைக்கும் பணிகளைத் தடுத்து நிறுத்தினர்.
கதிராமங்கலத்தில் மீத்தேன், ஷேல் காஸ் எடுக்கும் திட்டம் இல்லை என எண்ணெய் மற்றும் இயற்கை எரிகாற்றுக் கழகம் சார்பில் தெரிவிக்கபட்டாலும் ஆழ்குழாய்கள் பதிக்கப்பட்டுதான் வருகிறது.
இதனால் கதிராமங்கலம் கிராமத்தில் ஜூன் 1 ஆம் தேதியும், 2 ஆம் தேதியும் பொதுமக்கள் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அணி திரண்டனர்.
ஆனால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக விவசாய அணிச் செயலாளர் ஆடுதுறை முருகன் மற்றும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் இருப்பதைக் கண்டறிந்து ஆய்வு செய்தது ஓஎன்ஜிசி நிறுவனம்தான்.
எனவேதான் கதிராமங்கலத்தில், பொதுமக்கள் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் புதிய துரப்பணப் பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தன்னெழுச்சியாகப் போராட்டக் களத்தில் இறங்கி உள்ளனர்.
விவசாயிகளை அலட்சியப்படுத்தும் போக்கில் மத்திய அரசு தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களைச் செயல்படுத்த முனைந்து வருவது கடும் கண்டனத்திற்கு உரியது.
கதிராமங்கலத்தில் மீத்தேன் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கக்கூடாது என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.
