Asianet News TamilAsianet News Tamil

உலகம் போற்றுகின்ற புரட்சி நாயகன் பிடல் காஸ்ட்ரோ - வைகோ இரங்கல்

vaiko fidel
Author
First Published Nov 26, 2016, 1:02 PM IST


உலகம் போற்றுகின்ற புரட்சி நாயகன் பிடல் காஸ்ட்ரோ என மதிமுக பொது செயலாளர் வைகோ, பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

"2016 ஆம் ஆண்டு நவம்பர் 26ம் நாளாகிய இன்று, மனிதகுலத்தின் இருதயத்தில் துன்ப ஈட்டியைச் சொருகி உள்ளது. ஆம்; உலக வரலாற்றில், யுகயுகாந்திரத்திற்கும் புகழ் படைத்த தலைவர்கள் வரிசையில், கியூபாவின் விடுதலை வேந்தன் ஃபிடல் காஸ்ட்ரோ (90) இன்று நம்மை விட்டுப் பிரிந்தார்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முழு ஆயுத பலத்தோடு கியூபாவில் அடக்குமுறை ஆட்சியை நடத்திக் கொண்டு இருந்த சர்வாதிகாரி பாடிஸ்டுடாவை எதிர்த்து இளம்வயதில் ஆயுதம் ஏந்திய போராட்டத்தைத் தொடங்கினார் காஸ்ட்ரோ.

vaiko fidel

மான்கடா படைத்தளத்தைத் தகர்க்க முனைந்து, அந்த முயற்சி தோற்றபின், சகாக்கள் பலரைப் பலிகொடுத்த நிலையில், சியாரா மஸ்ட்ரா குன்றுகளில், ஆயுதப் பயிற்சிகளைத் தந்து, அர்ஜெண்டைனாவில் பிறந்த மாவீரன் சே குவேராவின் தோள் வலியை துணைவலியாகப் பெற்று, 6 ஆண்டு போராட்டத்தில், சர்வாதிகாரி பாடிஸ்டுடாவின் படைகளை நொறுக்கி, 1959ம் ஆண்டு ஜனவரி 8ம் நாள் தலைநகர் ஹவானா வீதிகளில் வெற்றிப் புரட்சிக்கொடி ஏந்தி வீர வலம் வந்தார். கியூபக் குடியரசை நிறுவினார்.

மார்க்சின் தத்துவத்திலும் லெனினின் கொள்கையிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்ட போதிலும் கம்யூனிச உலகத்தில் தனித்த ஒளிச்சுடராகப் பிரகாசித்தார்.

vaiko fidel

உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டு இருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அருகில் 80 கல் தொலைவில் இருந்துகொண்டே, எதற்கும் அடிபணியாத துணிச்சல்காரராக கியூப அரசை நடத்தினார். எத்தனையோ கொலை முயற்சிகளில் உயிர் தப்பினார்.

புரட்சிகரமான சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். அமெரிக்க முதலாளித்துவ நிறுவனங்களை ஒழித்துக் கட்டினார். அணிசேரா நாடுகளின் அமைப்பின் முக்கியத் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.

66 ஆண்டுகள் ஆனபின்னரும், ஃபிடல் கேஸ்ட்ரோ நிறுவிய அரசை அசைக்க முடியவில்லை. அவர் புரட்சிக்காரராக அரசைக் கவிழ்க்க சதி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டபோது, 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' என அவர் முழங்கிய உரை, உலகெங்கும் தேசிய விடுதலைக்குப் போராடுகின்றவர்களுக்குப் புத்துணர்ச்சி தரும் வீரியமிக்க உரை ஆகும்.

எரிமலை போன்ற புரட்சிக்காரராக இருந்தபோதும், அவர் நெஞ்சம் கவர்ந்த உரை இயேசு கிறிஸ்துவின் மலைப் பிரசங்கம்தான் என்று பிரகடனம் செய்தார். அவரது இதயம் கவர்ந்த புத்தகம் விக்டர் ஹ்யூகோ எழுதிய ஏழை படும் பாடு (Les Miserable) ஆகும்.

வரலாறு அடிமைத்தளைகளில் இருந்து காஸ்ட்ரோவையும் கியூபாவையும் விடுவித்தது. ஆனால், வரலாற்றின் புகழில் இருந்து ஃபிடல் காஸ்ட்ரோவை ஒருபோதும் விடுவிக்க முடியாது.

தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் எத்தனையோ மேடைகளில் காஸ்ட்ரோ - சேகுவேரா வீரத்தைப் பேசி இருக்கின்றேன். உலகம் போற்றுகின்ற புரட்சி நாயகனுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.'

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios