பொய் வழக்கு.. பாசிச அடக்குமுறை..! அன்பழகன் கைதுக்கு எதிராக கொந்தளிக்கும் வைகோ..!
இன்று அதிகாலையில் பத்திரிகையாளர் அன்பழகன் மீது பிணையில் வரமுடியாத பிரிவுகளில் பொய் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான இத்தகைய பாசிச அடக்குமுறைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களுள் ஒருவர் அன்பழகன். சென்னை நந்தனத்தில் தற்போது நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் அரங்கு அமைத்திருக்கும் அவர், தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக அமைச்சர்களின் ஊழல்கள் என சில புத்தகங்கள் எழுதி விற்பனைக்கு வைத்திருந்தார். இந்தநிலையில் இன்று அதிகாலையில் வீட்டில் வைத்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது கைது எதிராக மு.க ஸ்டாலின், தினகரன் உட்பட பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ அன்பழகன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில், பத்திரிகையாளர் வி.அன்பழகன் அவர்கள், மக்கள் செய்தி மையம் என்ற அரங்கத்தை நடத்தி வந்தார். தமிழக அரசுக்கு விரோதமான செய்திகள் அடங்கிய புத்தகங்கள் அங்கு இடம்பெற்று இருப்பதாகக் கூறி, செய்தி அரங்கத்தை தமிழ்நாடு காவல்துறை காலி செய்ய வைத்தது.
இன்று அதிகாலையில் பத்திரிகையாளர் அன்பழகன் மீது பிணையில் வரமுடியாத பிரிவுகளில் பொய் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான இத்தகைய பாசிச அடக்குமுறைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன். பத்திரிகையாளர் அன்பழகன் மீது போடப்பட்ட வழக்கை தமிழக காவல்துறை திரும்பப் பெற்று, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.