vaigaiselvan questions election commission about admk symbol
இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி இருப்பதில் ஏதோ தவறு நடந்திருப்பதாகவும், எந்த தர்க்கத்தின் அடிப்படையில் இப்படி ஒரு முடிவை தேர்தல் ஆணையம் எடுத்தது என சசிகலா தரப்பு ஆதரவாளர் வைகை செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக இரண்டாக பிளவடைந்ததையடுத்து சசிகலா அணி ஒ.பி.எஸ் தரப்பையும், பன்னீர்செல்வம் அணி சசிகலா தரப்பையும் குற்றம் சாட்டி வந்தனர்.
இதனிடையே ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அரசியல் கட்சிகள் வேட்பு மனுதாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வந்தனர்.

அதிமுக இரண்டாக இருப்பதால் யாருக்கு இரட்டை இலை சின்னம் என்பதில் சசிகலா தரப்புக்கும் ஒ.பி.எஸ் தரப்புக்கும் போட்டி நிலவியது.
இதனால் இருதரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று அதிமுகவின் இருதரப்பும் வேறு சின்னங்களுடன் வேட்பு மனுதாக்கல் செய்தது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சசிகலா தரப்பு ஆதரவாளர் வைகை செல்வன் கூறியதாவது :

தேர்தல் ஆணையம் அறிவித்த முடிவில் எங்கேயோ தவறு நடந்துள்ளதாக நினைக்கிறோம்.
சசிகலா நியமனம் தொடர்பாகவே ஒ.பி.எஸ் தரப்பு ஆவணங்களை தாக்கல் செய்தது.
எந்த தர்க்கத்தின் அடிப்படையில் இரட்டை இலையை முடக்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது?

ஒ.பன்னீர்செல்வத்தை அம்பாக எய்தவர்கள் திராவிட இயக்கத்தை வேரறுக்க நினைக்கின்றனர்.
ஆர்.கே.நகரின் வெற்றிக்கு பிறகு இரட்டை இலை மீண்டும் துளிர்த்து எழும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
