வைகோவிடம் திமுகவினர் அராஜகம்- கருணாநிதியை பார்க்காமல் திரும்பினார்
காவேரி மருத்துவமனையில் கருணாநிதியை காண வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காரை முற்றுகையிட்டு கற்கள், செருப்புகளை வீசி திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டதால் வைகோ திரும்பி சென்றார்
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் இரண்டாவது முறையாக அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் தொற்று மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக ட்ரக்யோஷ்டமி என்ற கருவி பொறுத்தப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். ராகுல் காந்தி , அதிமுக மாநிலங்களவை துணைத்தலைவர் தம்பிதுரை , அமைச்சர் ஜெயகுமார், திருமா வளவன், இடதுசாரி கட்சித்தலைவர்கள் உள்ளிட்டோர் கருணாநிதியை பார்க்க வந்து சென்றனர்.
இன்று மாலை மதிமுக தலைவர் வைகோ கருனாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க 7-30 மணி அளவில் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் மதிமுக நிர்வாகிகள் சு.ஜீவன் உள்ளிட்டோர் வந்தனர்.
அப்போது அங்கே குவிந்திருந்த திமுக தொண்டர்கள் திடீரென அவருடை அவருடைய வாகனத்தை சூழ்ந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். இதை எதிர்பார்க்காத வைகோ காரை நிறுத்த சொன்னார். காரைவிட்டு இறங்க முயன்ற அவரை இறங்கவிடாமல் கட்சி நிர்வாகிகள் சூழ்ந்து பாதுகாத்தனர்.
அதற்குள் காரை நோக்கி கற்களும் , செருப்புகளும் கட்டைகளும் வீசப்பட்டது. இதயடுத்து காரைவிட்டு இறங்கிய வைகோ தனது கட்சிக்காரர்களை பார்த்து திரும்பி செல்லும்படி கூறி காரை திருப்பி சென்றார்.
இதனால் மருத்துவமனை வளாகத்தில் பதற்றமம் ஏற்பட்டு, சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது. போலீசார் அந்த இடத்துக்கு வந்து அமைதி ஏற்படுத்தினர். திமுகவினரின் இந்த செயலை தடுக்க முடியாமல் அங்கிருந்த தலைவர்கள் மவுனமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.