Urban Election : அதிமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்..? தனித்து போட்டியிடுகிறதா பாஜக.? அண்ணாமலை கையில் முடிவு.!
கூட்டணி குறித்து முடிவெடுக்க அண்ணாமலைக்கு முழு அதிகாரம் உள்ளது. தற்போது பாஜகவில் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடந்து வருகிறது. வேட்பாளர் நேர்காணல் அடுத்த இன்னும் 2 நாட்களில் நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், கூட்டணி குறித்து அண்ணாமலைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அரசியல் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது. பாமக, தேமுதிக, நாம் தமிழர், மநீம, அமமுக ஆகிய கட்சிகள் தேர்தலை தனியாக எதிர்கொள்ளும் நிலையில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணிகள் களமிறங்குகின்றன. அதிமுக கூட்டணியில் முக்கியமாக பாஜக, தமாகா ஆகிய கட்சிகள் மட்டுமே உள்ளன. அதிமுக - பாஜக இடையே திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும், இரு கட்சிகளுமே வேட்பாளர்களை இறுதி செய்வதில் பிஸியாக உள்ளன. இதற்கிடையே, பாஜகவில் தனித்து போட்டியிட வேண்டும் என்ற குரல்கள் அக்கட்சியில் எழுந்துள்ளதாக கமலாய வட்டாரங்களில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக நயினார் நாகேந்திரன், “சட்டப்பேரவையில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒருவர் கூட இல்லை” என்ற விமர்சனத்துக்குப் பிறகு, தனித்து போட்டி என்ற யோசனைகள் முன்வைக்கப்படுவதாகத் தெரிகிறது.
நயினார் நாகேந்திரன் விவகாரத்தால், அதிமுக சார்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாண்டி அமைப்புச் செயலாளர்களும் பாஜகவுக்கு பதிலடி கொடுத்து விமர்சித்தனர். எனவே, அடிமட்ட அதிமுக தொண்டர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் இடைஞ்சல் இருக்கும் என்றும் அதிமுக வாக்குகள் பாஜகவுக்கு முழுதாகக் கிடைக்குமா என்ற சந்தேகமும் பாஜகவுக்கு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே கட்சியின் மூத்த தலைவர்கள் மேலிட முக்கிய தலைவர்களிடம் தனித்து போட்டியிடுவது தொடர்பாகப் பேசியிருப்பதாகத் தெரிகிறது. என்றாலும் இந்த விஷயத்தில் கட்சி தலைமை எடுக்கும் முடிவுப்படி செயல்படவும் தமிழக பாஜகவில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக் கமலாய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கூட்டணி குறித்து பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார். “நகர்ப்புற தேர்தல் தொடர்பாக விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. கூட்டணி குறித்து முடிவெடுக்க அண்ணாமலைக்கு முழு அதிகாரம் உள்ளது. தற்போது பாஜகவில் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடந்து வருகிறது. வேட்பாளர் நேர்காணல் அடுத்த இன்னும் 2 நாட்களில் நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்து அண்ணாமலைதான் முடிவெடுப்பார். தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டிய தேவை இப்போதைக்கு ஏற்படவில்லை,” என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.