உ.பி தேர்தல் ஜாதிய, வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் - அமித்ஷா பேச்சு
ஜாதிய, தாஜா அரசியல் மற்றும் வாரிசு ஆட்சிக்கு முடிவு கட்டுவதாக உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் அமையும் என்று, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.
உத்தரப் பிரதேச மாநிலம், மகாராஜ் கஞ்ச்சில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அமித்ஷா கூறியதாவது-
பா.ஜனதா ஆட்சி
‘‘உ.பி.யில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இதை நான் அகிலேஷ் யாதவுக்கு பகிரங்க சவாலாகக் கூறிக்கொள்கிறேன். மார்ச் 11-ந்தேதி கலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது....
மத்தியானத்திற்குள் ஓட்டு எண்ணிக்கை நடைமுறைகள் முடிந்துவிடும். 1 மணிக்குள் அகிலேஷ் யாதவின் ஆட்சி முடிவுக்கு வந்துவிடும்.
முடிவு கட்டும்
இந்தத் தேர்தல் முடிவு ஜாதிய, தாஜா அரசியல் மற்றும் வாரிசு ஆட்சிக்கு முடிவு கட்டும் அடையாளமாக இருக்கும்.
பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்தும் விதத்தில் மிகப் பெரும்பான்மை பலத்துடன் பா.ஜனதாவை வெற்றி பெறச் செய்யும்படி, உ.பி. வாக்காளர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
பாலும் நெய்யும்..
பா.ஜனதா ஆட்சி அமைந்ததும், மாநிலம் முழுவதும் இறைச்சிக்காக கால்நடைகள் கொல்லப்படும் வதைக்கூடங்கள் அனைத்தும் மூடப்படும். கால்நடைகளின் ரத்தம் பெருக்கெடுத்து ஓடுவதற்குப் பதிலாக பாலும் நெய்யும் பெருக்கெடுத்து ஓடும்.
உ.பி.யில் கடந்த 15 ஆண்டு கால சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் கட்சிகளின் ஆட்சியில் வளர்ச்சிப்பணிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன.
பஞ்சரான சைக்கிள்
மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு 104 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்புகிறது. அதே நேரத்தில், ஏற்கனவே பஞ்சராகிப்போன சைக்கிளை (சமாஜ்வாதி சின்னம்) ராகுல் காந்தி தள்ளிக்கொண்டு இருக்கிறார்’’.
இவ்வாறு அமித்ஷா கூறினார்.