திருவல்லிக்கேணி அதிமுக பிரமுகர் மகனை கடத்த முயற்சி
திருவல்லிக்கேணி அதிமுக பகுதி செயலாளர் மகனை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் கடத்த முயன்றதாகவும் அவர் தப்பித்து வந்ததாகவும் ராயபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதிமுக திருவல்லிக்கேணி சேப்பாக்கம் பகுதி செயலாளராக இருப்பவர் வி.கே.பாபு (எ)அப்துல் கறீம். இவரது மகன் டி.ஏ.வி பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று மதியம் 3.30 மணி அளவில் தனது வீட்டின் அருகில் சென்று கொண்டிருந்தபோது இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து மடக்கியுள்ளனர்.
பின்னர் பாபு மகனை மடக்கி கடத்த முயற்சித்துள்ளனர். அவர் கூச்சல் போடவே அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது பற்றி தனது தந்தை வி.கே .பாபுவிடம் அவரது மகன் தகவல் தெரிவித்தார். இதையடுத்து வி.கே.பாபு உடனடியாக ராயபேட்டை காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.
புகாரை பெற்ற போலீசார் சிஎஸார் கொடுத்துள்ளனர். மாணவனிடம் அவனை கடத்த முயன்றவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். பழைய குற்றவாளிகள் புகைப்படங்களை காட்டி விசாரணை நடத்துகின்றனர். இது தவிர சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமரா
எதுவும் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக நிர்வாகி மகனை கடத்த முயன்றவர்கள் யார் , உட்கட்சி பூசல் எதாவது உள்ளதா எனவும் பகுதி செயலாளர் வி.கே .பாபுவிடமும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.