கிட்டெக்ஸ் கர்நாடகத்தில் தொழில் தொடங்க அழைப்பு.. மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்ட சூப்பர் தகவல் .
இந்நிலையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பதவியேற்றுள்ள ராஜீவ் சந்திரசேகர், கிட்டெக்ஸ் நிறுவனம் கர்நாடகாவில் தொழில் தொடங்க வரவேற்றுள்ளார்.
உலகிலேயே குழந்தைகளுக்கான ஆடை உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் கிட்டெக்ஸ் நிறுவனத்தை கர்நாடகாவில் தொழில் தொடங்க வருமாறு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் அழைப்பு விடுத்துள்ளார். குழந்தைகள் ஆடை உற்பத்தியில் உலகிலேயே இரண்டாம் இடம் வகிக்கும் நிறுவனம் கிட்டெக்ஸ் இந்நிறுவனத்தின் அதிபர் சாபு ஜேக்கப் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். இந்நிறுவனம் கேரளாவை தளமாக கொண்டு இயங்கி வருகிறது. அந்நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வந்த நிலையில், மாநில அரசுடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக, கேரளாவை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக அந்நிறுவன அதிபர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
இதை பயன்படுத்திக் கொண்ட தெலுங்கானா மாநில அரசு கிட்டெக்ஸ் தொழிற்சாலையை தெலுங்கானாவில் தொடங்க அழைப்பு விடுத்துள்ளது. அம்மாநில தொழில் துறை அமைச்சர் கே.டி ராமாராவ் அந்நிறுவனத்தின் அதிபர் சாபு ஜேக்கப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், தெலுங்கானாவின் வாரங்கல்லில் சுமார் 1000 கோடி ரூபாயில் ஜவுளி உற்பத்தி பிரிவு அமைக்க அந்நிறுவனம் முன்வந்துள்ளது. அதே நேரத்தில் தெலுங்கானா அரசும், கிட்டெக்ஸ் நிறுவனத்திற்கு நிலம் மற்றும் மானியங்களை வழங்க முன்வந்துள்ளது. இந்நிலையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பதவியேற்றுள்ள ராஜீவ் சந்திரசேகர், கிட்டெக்ஸ் நிறுவனம் கர்நாடகாவில் தொழில் தொடங்க அழைப்புவிடுத்துள்ளார். இதுகுறித்து அந்நிறுவனத்தின் அதிபர் சாபு ஜேக்கப் உடன் உரையாடியதாகவும் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கிட்டெக்ஸ் அதிபர் சாபு ஜேக்கப்புடன் பேசினேன், ஆயிரக்கணக்கான கேரள மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அந்நிறுவனத்திற்கு அனைத்து வகையிலும் ஆதரவு அளிக்கப்படும். அதே நேரத்தில் கர்நாடகாவில் முதலீடு செய்ய மாநில முதல்வர் எடியூரப்பாவின் முழு ஆதரவோடு கிட்டெக்ஸ் நிறுவனத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.கர்நாடகத்தில் தொழில் தொடங்க கிட்டெக்ஸ் நிறுவனத்துக்கு அழைப்புவிடுத்துள்ள, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், கர்நாடகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வானவர் என்பது குறிப்பிடதக்கது.