இந்திரா காந்தி காலத்தை விட படுமோசம்…. நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவுகிறது! யஷ்வந்த் சின்ஹா ஆவேசம்
இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாகவும், அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுவதாகவும் பாஜகவில் இருந்து விலகிய மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திரா காந்தி காலத்தில்,நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டதை பிரதமர் மோடி திங்களன்று விமர்சித்திருந்தார். இந்நிலையில், அவருக்கு பதிலடி கொடுக் கும் விதமாக, ‘1975-இல் இந்திரா காந்தி காலத்தில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையை விட, தற்போது அதிக ஆபத்து நிறைந்த அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நாட்டில் நிலவுகிறது’ என்று யஷ் வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
ஜனநாயகம் ஆபத்தில்இருக்கிறது; அரசியலமைப்பை மோடி அரசு நகைச்சுவை ஆக்கிவிட்டது; அனைத்து அரசு அமைப்புகளும், நிறுவனங்களும் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என அவர் குற்றம் சாட்டினார்.
மற்றவர்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் காவல்துறையை ஏவிவிடும் மத்திய ஆட்சியாளர்கள், அரசாங்கத்தில் உயர் பதவி வகிப்பவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து மறந்தும் வாய் திறப்பதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
பண மதிப்பு நீக்க காலத் தில் முதல் 5 நாட்களுக்குள் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ. 745 கோடியே 58 லட்சம் பழைய ரூபாய் நோட்டுக்கள் டெபாசிட் செய்யப்பட்டுள்ள விஷயத்தில், பாஜக தலைவர்அமித் ஷா சம்பந்தப்பட்டுள்ளாரே; அவர் மீது யார் விசாரணைக்கு உத்தரவிடுவது? என்றும் சின்ஹா கேள்வி எழுப்பியுள்ளார்.