உதயநிதியால் கச்சத்தீவில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து வர முடியுமா என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கேள்வி எழுப்பினார். 

திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணகோபாலை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பிரசாரம் மேற்கொண்டார். துவரங்குறிச்சி பகுதியில் அவர் பேசுகையில், “திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எய்ம்ஸ் மருத்துவமனை என செங்கலை எடுத்து அதிமுகவிடம் அருமையான கேள்வியைக் கேட்கிறார். நல்ல கேள்விதான். ஆனால், உதயநிதியால் கச்சத்தீவில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து வர முடியுமா? அவர்கள் மீது குறையை வைத்துக் கொண்டு அடுத்தவர்களை பற்றி கேள்வி கேட்கிறார்கள்.
தற்போது உருவாகியுள்ள அமமுக – தேமுதிக கூட்டணி என்பது துரோகத்தால் உருவான கூட்டணி. கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம். ஆனால், இப்போது அமமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். ஏனென்றால் அமமுகவில்தான் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் இருக்கிறார்கள். இஸ்லாமியர்களுக்கும் எங்களுக்கும் எப்போதும் ஓர் ஒற்றுமை உண்டு. சிறுபான்மையின மக்களுக்கு விஜயகாந்த் எப்போதுமே நல்லது செய்துகொண்டிருப்பவர். 
அதனால்தான் என்னுடைய தம்பி பெயர் முதலில் சௌகத் அலி என வைக்கப்பட்டது. ஆனால், பாஸ்போர்ட் உள்ளிட்ட தேவைகளுக்காக சண்முக பாண்டியன் என வைத்தோம். இப்போதும் நான் வீட்டில் சௌகத் என்றுதான் அழைப்பேன்” என்று விஜய பிரபாகரன் பேசினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred