TVV DInakaran Start again Jayalalithaas hospital story

சசி கோஷ்டியை வளைத்து வளைத்து நடத்தப்பட்ட ரெய்டின் உள்நோக்கம் பணம், நகைகள், சொத்துக்கள் பற்றிய ஆவணங்கள் மட்டுமில்லை ‘அதுக்கும் மேலே’ என்று ‘ஐ’ வில்லன்கள் போல் சிலர் கொளுத்திப் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அந்த ‘அதுக்கும் மேலே’வில் அடங்குபவற்றில் ஒன்றுதான் ‘அப்பல்லோவில் ஜெயலலிதா இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோக்கள் அடங்கிய சி.டி.’ என்பது. ஆக அந்த வீடியோவை நோக்கித்தான் ரெய்டு பூதம் நகர்ந்ததா? என்று தினகரனிடம் கேட்டால்...

“ரெய்டுக்கும், அம்மாவின் அப்பல்லோ நாட்கள் வீடியோவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மருத்துவ மனைப் படுக்கையில் நைட்டி உடையில் படுத்தபடி அம்மா டி.வி. பார்க்கிறார், ஜூஸ் குடிக்கிறார். இந்த மாதிரி ஒரு வீடியோவைத்தான் சின்னம்மா எடுத்திருக்கிறார். இந்த வீடியோவை எங்கே தேவையோ அங்கே சில நிபந்தனைகளுடன் ஒப்படைப்பேன்.

ஆக இதெல்லாம் ரெய்டுக்கு காரணமில்லை. எங்களை ஒழிக்க ஏதாவது கிடைக்காதா என்ற நோக்கத்துடனேதான் இந்த ரெய்டு நடத்தப்பட்டது.” என்று சொல்லியிருக்கிறார். 

ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்தபோது ‘இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார், இடியாப்பம் சாப்பிட்டார்’ என்று அ.தி.மு.க. அமைச்சர்கள் உள்ளிட்ட அக்கட்சியின் சில முக்கியஸ்தர்கள் நிறைய எடுத்துவிட்டார்கள். ஆனால் அவையெல்லாம் பொய்யே! என்று சமீபத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொது இடத்தில் கூறி மன்னிப்பும் கேட்டார். 

இந்நிலையில் இப்போது தினகரன் புதிதாய் ஒன்றை துவக்கியிருக்கிறார். ஜெயலலிதா நைட்டி உடையிலிருந்தார், ஜூஸ் குடித்தார் என்று இன்று கூறுவதெல்லாம் இன்னும் சில காலத்தில் என்னவாக மாறுமோ என புரியவில்லை என்று சொல்லி புலம்புகிறான் அக்கட்சியின் அடிமட்ட உண்மைத்தொண்டன்.