நடந்தது இணைப்பே இல்லை… பதவியை காப்பாற்றிக் கொள்வதற்கான வணிக ஒப்பந்தம்… ஆவேசமான டி.டி.வி.தினகரன்
அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்துள்ள நிலையில் ஈஇது இணைப்பே இல்லை என்றும், சில நபர்களின் சுயநலத்துக்ககாகவும், பதவி ஆசைக்காகவும், பதவியை காப்பாற்றிக் கொள்வதற்குமான வணிக ரீதியான ஒப்பந்தம் என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது டீவிட்டர் பக்க்த்தில் கடுமையாக கருத்துத் தெரிவித்துள்ளார்.
‘ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டு அணிகளாக பிரிந்த அ.தி.மு.க நேற்று இணைந்தது. ஓபிஎஸ் துணை முதலமைச்சராகவும், மா.பா. பாண்டியராஜன் அமைச்சராகவும் பதவியேற்றார்.
ஆனால், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலா ஆதரவாளர்களை புறக்கணிக்கும் நடவடிக்கையில் ஒன்றாக இணைந்த அதிமுகவினர் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளராக இருக்கும் சசிகலாவை கட்சியிலிருந்து நீக்குவதற்கான வேலைகளை அவர்கள் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இரு அணிகள் இணைப்பால் அதிருப்தியில் உள்ள டி.டி.வி. தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் , இன்று நடந்தது இணைப்பே அல்ல என்றும், சில நபர்களின் சுயலாபத்திற்காகவும் பதவி ஆசைக்காகவும் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்குமான வணிக ரீதியான உடன்படிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கை எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது எல்லாம் வல்ல இறைவனுக்கே வெளிச்சம் என்றும் அவர் கூறியுள்ளார்..
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் ஓபிஎஸ்யும், பின்னர் எடப்பாடி பழனிசாமியையும் முதலமைச்சராக்கிய சசிகலாவுக்கு துரோகம் செய்த நபர்களை கழக தொண்டர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும் மன்னிக்க மாட்டார்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார்.
நேற்று வரை ஊழல் ஆட்சி நடைபெறுவதாக சொன்ன ஓபிஎஸ்சோடு எப்படி தான் இவர்களால் இன்றைக்கு கைக்கோர்க்க முடிகிறதோ? இந்த துரோகிகளால் ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்குவதற்காகவே, கோடான கோடி கழக தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று எனது அரசியல் பயணம் தொடரும் என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்..
துரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லை! துரோகத்தை வேரறுப்போம்! கழகத்தை காப்போம் என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.