டி.டி.வி.தினகரன் தனி ஆள் இல்ல... இதோ வந்துவிட்டது கூட்டணிக்கு ஒரு கட்சி..!
நாடாளுமன்றத் தேர்தலில் எல்லா கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் பிஸியாக உள்ள நிலையில், தனித்து விடப்பட்டுள்ள அமமுக, தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் ஆதரவை நாடியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் எல்லா கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் பிஸியாக உள்ள நிலையில், தனித்து விடப்பட்டுள்ள அமமுக, தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் ஆதரவை நாடியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியும் அதிமுக கூட்டணியும் தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகின்றன. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் உச்சத்தை எட்டியுள்ளன. ஆனால், கூட்டணி அமைப்பது தொடர்பாக சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறி வரும் தினகரன், 40 தொகுதிகளில் தனித்து போட்டி என்றும் கூறிவருகிறார்.
ஆனால், அரசியல் களத்தில் அவர் தற்போது தனித்துவிடப்பட்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்களும் கூறிவருகிறார்கள். அதே வேளையில் தினகரன் மக்கள் சந்திப்பு பயணத்தைத் தொடங்கி வாக்குகள் கேட்டு பிரச்சாரத்தை நடத்திவருகிறார்.
இந்நிலையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் ஆதரவை அமமுக கேட்டு, அந்த அமைப்பின் நிர்வாகிகளை நாடியுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் தலைமையிலான குழு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம். பாக்கர், துணை தலைவர் முஹம்மது முனீர், பொதுச் செயலாளர் முஹம்மது சித்திக் ஆகியோருடன் வெற்றிவேல் குழு ஆலோசனை நடத்தியது. தேர்தலில் ஆதரவு அளிக்ககோரி தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் நிர்வாகிகளைச் சந்தித்ததாக அமமுக வட்டாரங்கள் தெரிவித்தன.