”எங்களுக்குதான் இரட்டை இலை கிடைக்கும்” - திட்டவட்டமாக சொல்லும் டிடிவி வக்கீல்...!
கட்சியில் ஆதரவு யாருக்கு அதிகம் உள்ளது என்பதே முக்கியம் எனவும், எத்தனை எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் என்பது பொருட்டல்ல எனவும் டிடிவி தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை விவகாரம் தொடர்பாக இன்று காலை எடப்பாடி டீம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த நிலையில், தற்போது டிடிவி அணியும் தாக்கல் செய்துள்ளது.
அதிமுக இரண்டாக பிரிந்ததையடுத்து பன்னீர்செல்வமும் சசிகலா தரப்பும் தங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியது.
இதனால் குழப்பமடைந்த தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. இதையடுத்து இரு தரப்பும் பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்து வந்தது.
இதைதொடர்ந்து எடப்பாடி தரப்பும் ஒபிஎஸ் தரப்பும் ஒன்றாக இணைந்தாலும் டிடிவி தரப்பு தனியாக செயல்பட்டு வருகிறது. மேலும் கட்சி எங்களுக்கே சொந்தம் என கூறி வருகிறது.
எனவே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
மேலும் செப்டம்பர் 29 ஆம் தேதிக்குள் இரட்டை இலை சின்னம் குறித்து பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
இதைதொடர்ந்து இரட்டை இலை விவகாரத்தில் பிரமான பத்திரங்கள் தாக்கல் செய்ய 3 வாரம் அவகாசம் கோரி டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் கடிதம் அளித்தார். ஆனால் தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
இதனை அடுத்து, அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், சி.வி. சண்முகம் மற்றும் மைத்ரேயன் எம்.பி., கே.பி. முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் இன்று டெல்லி சென்று பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையத்தில் கூடுதல் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், அவர்களை தொடர்ந்து டிடிவி அணியும் தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளது.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கட்சியில் ஆதரவு யாருக்கு அதிகம் உள்ளது என்பதே முக்கியம் எனவும், எத்தனை எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் என்பது பொருட்டல்ல எனவும் தெரிவித்தார்.
மேலும், செப்.12 ஆம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு சட்டத்திற்கு புறம்பானது எனவும், இரட்டை இலையும் கட்சியும் சட்டப்படி எங்களுக்கே கிடைக்கும் எனவும் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.