நம்பிக்கை வாக்கெடுப்பில் இருக்கிறது ’ட்விஸ்ட்’ - பூச்சாண்டி காட்டுகிறார் டிடிவி..?
தற்போதைய நிலை அப்படியே தலைகீழாக மாறும் எனவும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தங்கள் அணி எம்.எல்.ஏக்கள் யார் என்பதை காண்பிப்பார்கள் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்க வேண்டும் என்று தமிழக ஆளுனரிடம் கடிதம் கொடுத்த 19 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 18 பேரை தகுதிநீக்கம் செய்து பேரவைத்தலைவர் ஆணையிட்டார்.
இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணை வரும் 20 ஆம் தேதி நீதிமன்றத்துக்கு வர உள்ளது.
டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து தமிழகத்தில் 18 தொகுதிகள் காலி என தேர்தல் ஆணையத்திற்கு பேரவை செயலாளர் பூபதி கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ஆளுநர் தன் பதவிக்குரிய கண்ணியத்தில் இருந்து தவறிவிட்டார் எனவும், 117 எம்எல்ஏக்களின் ஆதரவு எடப்பாடி அரசுக்கு இல்லை எனவும் தெரிவித்தார்.
பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் எடப்பாடிக்கு உத்தரவிடவில்லை எனவும், தேவையில்லாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
பழனிசாமி அன் கோ வீட்டுக்கு செல்லும் நேரம் நெருங்கிவிட்டது எனவும் தங்களது எம்எல்ஏக்களுக்கு நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
அமைதியாக உள்ள தங்களது எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பாடம் புகட்டுவார்கள் எனவும், நிதானமே வெற்றியைத் தேடித்தரும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், தற்போது உள்ள நிலை அப்படியே தலைகீழாக மாறும் எனவும் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஒபிஎஸ் அணி மீது எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் தெரிவித்தார்.