சமூக நீதிக்கு எதிரானது நீட் தேர்வு !! அனிதா உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் டி.டி.வி.தினகரன் பேட்டி !!!
நீட் தேர்வு என்பது சமூக நீதிக்கு எதிரானது என்றும், மாணவர்கள் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூரை சேர்ந்த அனிதா கடந்த ஆண்டு நடந்து முடிந்த பிளஸ் டூ பொது தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இவரது தந்தை சண்முகம் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
சிறு வயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என கனவு கண்டு, அதற்காக கஷ்டப்பட்டு படித்து வந்தார் அனிதா. ஆனால் நீட் என்ற அரக்கன் அனிதாவின் வாழ்வில் விளையாடிவிட்டான்.
கிராமப்புற மாணவியான அனிதா நீட் நுழைவு தேர்வு எழுதியதில் 700 மதிப்பெண்களுக்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார்.
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அனிதா வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் அனிதா மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார்.
இதனால் மனமுடைந்த அனிதா இன்று தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் தற்கொலை தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மாணவி அனிதாவின் உடலுக்கு டி.டி.வி.தினகரன் அஞ்சலி செலுத்த வந்தார். அவருக்கு சில அமைப்புகளும், இளைஞர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது அவர்களை சமாதானப்படுத்திய திருமாவளவன், அவர் அஞ்சலி செலுத்த உதவினார். இதனைத் தொடர்ந்து அனிதாவின் உடலுக்கு மரியாதை செய்த டி.டி.வி.தினகரன்இ செய்தியாளர்களிடம் பேசும்போது, நீட் தேர்வு என்பது சமூக நீதிக்கு எதிரானது என்றும், மாணவர்கள் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பிளஸ் 2 தேர்வில் என்ன பாடத் திட்டம் உள்ளதோ அதன் அடிப்படையில்தான் நீட் தேர்வு இருக்க வேண்டும் எனவும் டி.டி.வி.தினகரன் குறிப்பிட்டார்.