பன்னீர் செல்வத்திற்கு கடும் எதிர்ப்பு - டிடிவி ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு...!
தனது சொந்த தொகுதிக்கு செல்வதற்காக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மதுரை விமானநிலையத்திற்கு சென்றார். அப்போது திரண்டிருந்த டிடிவி ஆதரவாளர்கள் பன்னீர்செல்வத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.
எடப்பாடி அணி ஒபிஎஸ் அணியுடன் இணைந்ததால் டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநரிடம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி மனு அளித்தனர்.
ஆனால் எடப்பாடி தரப்பு முதலில் அவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பி விட்டு பின்னர், எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்தது.
ஆனால் டிடிவி தரப்பு தொடர்ந்து எடப்பாடி அணிக்கும் ஒபிஎஸ் அணிக்கும் எதிர்ப்பு தெரிவித்தே வருகின்றனர். முதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடியையும் துணை முதல்வர் பதவியில் இருந்து ஒபிஎஸ்சையும் விலக்க வேண்டும் என்பதையே கோரிக்கையாக வைத்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தனது சொந்த தொகுதிக்கு செல்வதற்காக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மதுரை விமானநிலையத்திற்கு சென்றார். அப்போது திரண்டிருந்த டிடிவி ஆதரவாளர்கள் பன்னீர்செல்வத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அங்கிருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதில் டிடிவி ஆதரவாளர்கள் மல்லுகட்டவே அவர்களுக்கும் போலீசாருக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைதொடர்ந்து போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு கட்டுப்படாததால் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.