Asianet News TamilAsianet News Tamil

’கடைசி நேரத்துல இப்படிப் பண்ணிட்டாங்களே...’ மோடி- எடப்பாடியாரால் அலறும் டி.டி.வி.தினகரன்..!

மக்களின் மனநிலையை படம் பிடிக்கிறோம் என்ற பெயரில், ஆட்சியை இழந்து வீட்டுக்கு போகும் நேரத்தில் இப்படி ஜனநாயக விரோதக் காரியத்தை கூசாமல் செய்திருக்கிறார்கள்.

ttv dhinakaran Statement
Author
Tamil Nadu, First Published May 20, 2019, 1:17 PM IST


மோசடி கணிப்புகளை புறந்தள்ளி, வாக்கு எண்ணிக்கையில் கவனம் செலுத்த வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "அதிகார துஷ்பிரயோகம், அரசு இயந்திரங்களின் நெருக்கடி, தன்னாட்சி அமைப்புகளின் ஒருதலைபட்சமான முடிவு என அமமுகவுக்கு எதிராக எத்தனையோ அஸ்திரங்கள் தேர்தல் சமயத்தில் ஏவப்பட்டது. அவற்றை எல்லாம் துணிச்சலுடனும், அம்மாவின் உண்மை விசுவாசிகளான கோடிக்கணக்கான தொண்டர்களின் ஆதரவோடும் எதிர்கொண்டு, இந்தத் தேர்தல் களத்தை சந்தித்தது அமமுக.ttv dhinakaran Statement

நம்பி வாக்களித்த மக்களுக்கு எதையும் செய்யாமல் அவர்களை நிர்கதியாக தவிக்கவிட்ட மத்திய அரசையும், ஜெயலலிதாவின் லட்சியங்களுக்கும், கொள்கைகளுக்கும் விரோதமாக தமிழகத்தில் ஆட்சியை நடத்தியது மட்டுமல்லாமல், அவரது ஆன்மாவே மன்னிக்க முடியாத அளவுக்கு துரோகக் கூட்டணி அமைத்த எடப்பாடி பழனிசாமி கும்பலை வீட்டுக்கு அனுப்பவும், மாநிலத்தில் ஐந்து முறை ஆட்சியில் இருந்தும், மத்தியில் தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் ஆட்சியில் அங்கம் வகித்து, தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், தங்கள் சுயலாபத்துக்காக முக்கிய இலாகாக்களை கேட்டுப்பெற்று லாபம் அடைந்த தீய சக்தியான திமுகவை விரட்டியடிக்கும் வகையிலும், தமிழகத்திற்கு காலம் தந்த வெற்றிச் சின்னமாம் பரிசு பெட்டகம் சின்னத்திற்கு தமிழக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.ttv dhinakaran Statement

தேர்தல் பிரச்சாரக் களத்திலும் சரி... வாக்களிக்க நின்ற வரிசையிலும் சரி... மக்களின் முகங்களில் இந்த உணர்வுகளை நம்மால் உணர்ந்துகொள்ள முடிந்தது. இந்தப் பின்னணியில், அமமுக அபார வெற்றி என்ற செய்தியை அதிகாரபூர்வமாக அறிவிக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தலுக்கு முன்பாக ஊடகங்களை வளைத்து, தங்களுக்கு சாதகமாக கருத்துக் கணிப்புகளை வெளியிடச் செய்தவர்களே இப்போது அடுத்த காரியத்தையும் கூசாமல் செய்திருக்கிறார்கள்.

எவ்வளவோ அதிகார துஷ்பிரயோகங்களைச் செய்தும் வெற்றிக்கு வாய்ப்பில்லை என்பது புரிந்ததும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு என்ற பெயரில் அடுத்த புரட்டை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். மக்களின் மனநிலையை படம் பிடிக்கிறோம் என்ற பெயரில், ஆட்சியை இழந்து வீட்டுக்கு போகும் நேரத்தில் இப்படி ஜனநாயக விரோதக் காரியத்தை கூசாமல் செய்திருக்கிறார்கள். தீய சக்தியான திமுகவும் இந்த சித்து விளையாட்டுக்களில் தனது பங்களிப்பை சிறப்பாவே செய்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

ttv dhinakaran Statement

இது மோசடியான கருத்துக் கணிப்பு என்பதற்கு ஒரு உதாரணத்தை சுட்டிக் காட்டலாம். காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை நடத்தினோம் என்று ஒரு விவரத்தை வெளியிட்டது பிரபலமான ஒரு தமிழ் தொலைக்காட்சி. அதில் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு அதிகபட்சம் ஆறு சதவிகிதம் வாக்களித்ததாக மக்கள் சொன்னார்கள் என்று சொல்லப்பட்டது. அதாவது சுமார் 60 ஆயிரம் மக்கள் அந்தக் கட்சிக்கு வாக்களித்ததாக எடுத்துக்கொள்ள வேண்டுமாம்.

நிஜம் என்ன தெரியுமா? அந்தக் கட்சி, அந்தத் தொகுதியில் போட்டியிடவே இல்லை. வாக்கு இயந்திரத்தில் இல்லாத ஒரு பட்டனை அழுத்தி எப்படி மக்கள் வாக்களித்திருப்பார்கள்? எவ்வளவு பெரிய பித்தலாட்டம் இது. இந்த மோசடி அம்பலமானதும், அந்த ஆறு சதவிகிதத்தை பிரித்து பிரதான இரண்டு கட்சிகளுக்கு சேர்த்துப் போட்டிருக்கிறார்கள். இது அடுத்த பித்தலாட்டம். இப்படிப்பட்ட மோசடிகளை மூலதனமாக வைத்து வெளியான இந்தக் கருத்துக் கணிப்புகளை நம்ப மக்கள் தயாராக இல்லை. நமது கழகத் தொண்டர்களும் இதைப் புறந்தள்ள வேண்டும்.ttv dhinakaran Statement

உண்மை நிலவரம் அப்படி அல்ல என்பது தெரிந்தும் இப்படி ஒரு காரியத்தை அவர்கள் ஏன் செய்தார்கள் என்பதுதான் நாம் சிந்திக்க வேண்டியது. தோல்வி நிச்சயம் என்பது தெரிந்ததும், வெற்றிக் கோட்டை எட்டிப்பிடிக்கவுள்ள நமது இயக்கத் தோழர்கள் மத்தியில் ஒருவித குழப்பத்தை, சலிப்பை ஏற்படுத்தி, வாக்கு எண்ணும் மையங்களில் தங்களது அதிகார சித்து விளையாட்டுக்களை ஆடலாமா என்ற நப்பாசைதான் இந்தக் கருத்துக் கணிப்புகளின் பின்னணி.

நமது கழகத்தினருக்கு இது புரியாமல் இல்லை. ஆனாலும், நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இந்த நேரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்து கவனிக்க வேண்டியது. 'தேர்தல் முடிந்து பாதுகாப்பாக வைக்கப்படுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்யவும், ஆயிரக்கணக்கான இயந்திரங்களை மாற்றி வைக்கவும் நடக்கும் முயற்சிக்கு முன்னோட்டமாகவும், அதற்கு வசதியாகவும் இந்த கருத்துக்கணிப்பு வெளிவந்திருக்கிறது' என்று மம்தா பானர்ஜி சொன்ன கருத்து புறம்தள்ள முடியாத ஒன்றாகும்.

இதை மனதில்வைத்து, வாக்கு எண்ணிக்கை நாளான மே 23-ம் தேதி நாம் இரு மடங்கு விழிப்போடு இருக்க வேண்டியது அவசியமாகிறது. வாக்குப்பதிவு நாளன்று வாக்குச் சாவடியில் நமது முகவர்கள் வைத்திருந்த 17சி படிவத்தில், குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகள் பற்றிய விவரம் இருக்கும். அதை வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் சென்று, சம்பந்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரத்தை திறந்து எண்ணும்போது எச்சரிக்கையோடு ஒப்பிட்டு சரிபார்ப்பது அவசியம்.

ஒவ்வொரு மேஜையிலும் எண்ணப்படும் வாக்குகளை நமது முகவர்கள் இப்படி சரிபார்த்து கையெழுத்திட்டு, மொத்தமாக ஒரு சுற்று முடிவுகளை அதிகாரபூர்வமாக தேர்தல் ஆணைய அதிகாரி அறிவிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் முந்தைய சுற்று முடிவை அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் அடுத்த சுற்று எண்ணிக்கை தொடங்க அனுமதிக்கக் கூடாது.

ttv dhinakaran Statement

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, முதல் இரண்டு சுற்றுக்களில் தாங்கள் பின்னணியில் இருக்கிறோம் என்பது தெரிந்ததும், வாக்கு எண்ணிக்கையை நிறுத்த போலீஸ் துணையுடன் எடப்பாடி பழனிசாமி கும்பலும், தீயசக்தி கூட்டமும் முயற்சித்ததை நாம் பார்த்தோம். எப்படியாவது அதிகாரத்தைச் சுவைக்க வேண்டும் என்ற பதவி வெறியில் இருக்கும் திமுக, இதற்காக அதிகார வர்க்கத்தோடு கூட்டணி போட்டு, இப்போதும் அதுபோன்றதொரு முயற்சியை செய்யத் தயாராக இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. எனவே இறுதிச் சுற்று எண்ணி முடித்து அதிகாரபூர்வமாக முடிவுகளை அறிவிக்கும் வரை நமது முகவர்கள் உறுதியோடும், விழிப்போடும் இருக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் விரோத ஆட்சியையும், துரோக கும்பலையும் விரட்டியடிக்கும் வகையில், மக்கள் நமக்களித்த ஏகோபித்த ஆதரவை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் நாளான மே 23 அன்று வெற்றிக்கொடி நாட்டப்போவது நாம்தான்" என அவர் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios