வெற்றியோடு சேர்ந்து எனது பிறந்த நாளையும் கொண்டாடுவேன்! பிளான் போட்டு பர்த்டே கொண்டாடும் தினா!
ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றியுடன், தனது 54-வது பிறந்தநாளைக் கொண்டாடுவோம் என்றும், தேர்தல் வெற்றிக்காக பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளதாகவும், அதன்படி தினகரன் ஆதரவாளர்கள் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆர்.கே.நகரில், தினகரன் பிரசாரத்துக்கு வருகிறார் என்றாலே, தாய்மார்கள் கூட்டம் அதிகளவில் கூடுகிறார்கள். ஒவ்வொரு கூட்டத்துக்கும் 3 ஆயிரம் பேர் வரையில் கூடுகிறார்களாம். இவர்களுக்கான செலவுகள், ஆரத்தி செலவுகள், நிர்வாகிகளின் செலவுகள் ஆகியவற்றை கணக்கிட்டால் கோடிக்கணக்கில் செலவாகிறதாம்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டியிடுவதாக செய்திகள் வெளியான நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்களே தேர்தலில் நிற்க வேண்டாம் என்று கூறி வந்தனர். இந்த நிலையில், தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள் ஜெயானந்த். அதேபோல் விவேக் தரப்பில் இருந்தும் தினகரனுக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள்.
கடந்த 13 ஆம் தேதி, டிடிவி தினகரனுக்கு 54-வது பிறந்த நாள். ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தினகரன், வெற்றி பெற வேண்டும என்ற நோக்கத்தோடு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தனது 54-வது பிறந்த நாளைக்கூட அவர் பெரிதாக கொண்டாடவில்லை. தேர்தல் வெற்றியுடன், தனது பிறந்தநாளை சேர்த்து கொண்டாடுவோம் என்று தினகரன் கூறி வருகிறார்.
பிறந்த நாள் அன்று, திருப்பதிக்கு சென்ற தினகரன், அங்கிருந்து திருவண்ணாமலை சென்று சாமி தரிசனம் செய்தார். 12 ஆம் தேதி மலை நடைபெற்ற பிரச்சாரத்தின்போது, மக்களோடு மக்களாக தினரகன், பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார்.
தேர்தல் வெற்றிக்காக பல திட்டங்களை, ஆதரவாளர்களுக்கு வகுத்து வருகிறாராம் தினகரன். வாக்காளர்களின் ஆதரவு நன்றாகவே உள்ளது என்றும், வாக்காளர்களைப் பலமாக கவனிக்க வேண்டும் என்றும் தனது ஆதரவாளர்களுக்கு தினகரன் கூறியுள்ளாராம். அதன்படி ஆதரவாளர்களும், தினகரன் வகுத்துத் தந்த வியூகத்தின்படி செயல்பட்டு வருகின்றனர்.
அது மட்டுமல்லாது, தொகுதியில் உள்ள அனைத்து குடும்ப தலைவர், தலைவி ஆகிய இருவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வாக்குகளை தினகரன் தரப்பு உறுதி செய்து வருகிறது. தேர்தல் முடிவு வரும் வரை அன்றாட செலவுக்கும், குடும்பத்தில் ஒருவருக்கு ரூ.300 கொடுப்பதையும் தினகரன் தரப்பு தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.