டிடிவி எனக்கு நல்ல நண்பர்.. சசிகலா பற்றி நான் தப்பா பேசுனதே இல்ல.. அந்தர் பல்டி அடித்த கடம்பூர் ராஜூ ஆடியோ.!
டிடிவி தினகரனும் நானும் நல்ல நண்பர்கள். இங்கு உள்ளவர்கள் செய்த சதியால் அவர் என்னை எதிர்த்து கோவில்பட்டியில் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. அப்போது கூட தேர்தல் பரப்புரைகளில் நான் சசிகலா மற்றும் டிடிவி.தினகரனை விமர்சித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
சசிகலாவை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் டிடிவி.தினகரன் தமக்கு நல்ல நண்பர் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டு அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக விளங்குகிறது. இந்நிலையில், அரசியலில் இருந்து ஒதுங்குவதாக கூறிய சசிகலா திடீரென தொண்டர்களிடம் பேசி வருகிறார்.
இதனையடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சசிகலாவுடன் பேசிய அதிமுகவினர் 15 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக இந்த தீர்மானத்தை ஆதரித்து தமிழகம் முழுவதும் அதிமுக மாவட்ட கழகங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், தொண்டர் ஒருவரிடம் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ பேசிய ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப் போவதாக ஊடகங்களில் வந்த தகவல் தவறானது. சசிகலா குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்றும் அந்த இடத்தில் தான் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், டிடிவி தினகரனும் நானும் நல்ல நண்பர்கள். இங்கு உள்ளவர்கள் செய்த சதியால் அவர் என்னை எதிர்த்து கோவில்பட்டியில் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. அப்போது கூட தேர்தல் பரப்புரைகளில் நான் சசிகலா மற்றும் டிடிவி.தினகரனை விமர்சித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை கூறியுள்ளார்.