கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து போராட்டம் நடத்திய போது, திடீரென ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, டிடிவி தினகரன் காலில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஓபிஎஸ்- டிடிவி போராட்டம்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அப்போது கொள்ளையை தடுக்க முயன்ற காவலாளி கொலைசெய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 6 ஆண்டுகள் கடந்தும் இன்னும் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய முடியாத நிலை உள்ளது. இந்தநிலையில் டிடிவி தினகரனோடு இணைந்து கோடநாடு கொலை குற்றவாளிகளை கைது செய்ய கோரி ஓபிஎஸ் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார். தேனியில் நடைபெற்ற போராட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

துரோகிகள் கையில் அதிமுக

அப்போது பேசிய ஓ.பன்னீர் செல்வம், கோடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை செய்த குற்றவாளிகளையும், அதன் பின்னால் இருப்பவர்களையும் நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். இல்லை என்றால் மக்கள் போராட்டமாக வெடிக்கும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன், தினகரன், நாங்கள் இருவரும் இணைந்தது சுயநலத்திற்காக அல்ல, முதலமைச்சராக வர வேண்டும் என்பதற்காக ஒன்றினையவில்லை. துரோகிகள் கையில் சிக்கியுள்ள அதிமுகவை மீட்டு தொண்டர்களிடம் ஒப்படைக்கவே ஒன்றிணைந்துள்ளதாகவும் தெரிவித்தார். 

டிடிவி காலில் விழுந்த ஓ.ராஜா

முன்னதாக போராட்டம் தொடங்கிய போது, மேடைக்கு வந்த டிடிவி தினகரனை வரவேற்று தொண்டனர்கள் முழக்கங்களை எழுப்பி கொண்டிருந்தனர். அப்போது டிடிவி தினகரனுக்கு சால்வை அணிவித்த ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா திடீரென டிடிவி தினகரன் காலில் விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த டிடிவி தினகரன் பதறி என்ன அண்ணே இது எல்லாம் என தடுத்தார். இந்த காட்சிகளை அருகில் நின்று கொண்டிருந்த ஓ.பன்னீர் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தார். அதிமுகவில் ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராக இருந்த போது சசிகலாவை ஓ.ராஜா சந்தித்து பேசினார். இதன் காரணமாக கட்சியில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தால் நீக்கப்பட்டார். தற்போது டிடிவி தினகரன் -ஓபிஎஸ் இணைந்த நிலையில் ஓ.ராஜாவும் போராட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படியுங்கள்

கோடநாடு குற்றவாளிகளை காப்பாற்றும் திமுக? அறிக்கை விட்டு ஆளுங்கட்சியை உசுப்பேற்றி அதிமுகவை அலறவிடும் டிடிவி.!