பாஜகவை நம்பி நடுத்தெருவில் நிற்கும் திரிபுரா மக்கள் முன்னணி ! எதற்கு தெரியுமா ?
திரிபுராவில் ஆட்சியை கைப்பற்ற உதவிய பழங்குடிகள் கட்சிக்கு கொடுத்த தன்னாட்சி பிரதேச வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என பாஜக அறிவித்துள்ளது. இதனால் திரிபுரா முன்னணி தற்போது போராட்டத்தில் இறங்கியுள்ளது.
திரிபுராவில் 25ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மாணிக் சர்கார் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசு சமீபத்திய தேர்தலில் பிஜேபியிடம் தோல்வியை சந்தித்தது. இதனை நாடு முழுவதும் பிஜேபியினரும், இந்து அமைப்பினரும் கொண்டாடி தீர்த்தனர். அதன் உச்சகட்டமாக திரிபுராவிலுள்ள லெனின் சிலையை உடைத்தனர். ஆனால் பிஜேபி எப்படி இந்த வெற்றியை பெற்றது என்று நாடுமுழுவதும் இன்றுவரை விவாதம் நடைபெற்றுவருகிறது.
திரிபுராவில் பாஜக வெற்றிபெற்றதற்கு மிகமுக்கிய காரணங்களில் ஒன்று. திரிபுராவில் வெற்றியை நிர்ணயிக்கிற சக்தியாக இருக்கும் திரிபுரா மக்கள் முன்னணி திடிரென்று பாஜகவுக்கு ஆதரவளித்ததுதான்.
அதுதான் பாஜகவின் வெற்றிக்கு காரணமாக அமைந்ததென்று வெற்றிக்கு பின் பேட்டியளித்த திரிபுரா மாநில பாஜக பொறுப்பாளரும், அசாம் மாநில அமைச்சருமான ஹிமாந்த் பிஸ்வா தெரிவித்திருந்தார். . ஆனால் எல்லோருக்கும் அப்போது புரியாமல் இருந்தது எப்படி திரிபுரா மக்கள் முன்னணி பிஜேபி ஆதரவளித்தது என்பது தான்.அதற்கான காரணம் இப்போது அது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
அதாவது தேர்தலுக்கு முன் ஜனவரியில் திரிபுரா மக்கள் முன்னணியின் தலைவர் என்.சி. டெபர்பாமாவை மத்திய உள்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் இரகசியமாக சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது பழங்குடி மக்களுக்களுக்கென அவர்கள் வாழும் 8 மாவட்டங்களிலுள்ள 70,000சதுர கிலோ மீட்டர் பகுதியை தன்னாட்சி பகுதியாக அறிவிக்க ஒரு குழு ஏற்படுத்துகிறோம். அதன் பரிந்துரையின் அடிப்படையில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 6வது பிரிவை மாற்றுவோமென்று உறுதி கொடுத்திருக்கின்றார்கள்.
இந்த உறுதியின் அதனடிப்படையிலேயே தான் திரிபுராவில் இருக்கிற அனைத்து பழங்குடி அமைப்புகளும் பாஜகவுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறது. இதனால் பிஜேபியும் ஆட்சிக்கும் வந்துவிட்டது.
ஆனால் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் ஆகியும் தாங்கள் அமைப்போமென்று பழங்குடி மக்களுக்கு உறுதியளித்த குழுவை அமைக்காமல் இழுத்தடித்ததொடு தற்போது அப்படியொரு குழு அமைக்க இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் வழியில்லை என்று கையை விரித்திருக்கிறது பாஜக அரசு.
ஆட்சியை பிடிப்பதற்காக தங்களுக்கு தவறான வாக்குறுதியை கொடுத்து பிஜேபி தங்களை ஏமாற்றியிருக்கின்றது என்பதை உணர்ந்து தற்போது காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை திரிபுரா மக்கள் முன்னியின் இளைஞர் அமைப்பு கடந்த 31 ஆம் தேதியில் இருந்து நடத்தி வருகிறது.