தமிழகத்தில் டோல்கேட்டில் கட்டணக் கொள்ளையையும், அவற்றை பராமரிக்கும் தனியார் நிறுவனங்களின் அராஜகங்களையும்  பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றும் இந்த டோல்கேட்டால் தமிழக மக்கள் பெரும் அவதிப்படுவதாகவும் அமைச்சர் நிதின் கட்கரியிடம் எடுத்துச் சொன்ன தமிழக எம்.பி.க்கள்  அதனை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

தமிழக சட்டப் பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக எம்.பி..ககள் அதிகம் இருப்பதால் தமிழகத்தில் டோல்கேட்டுகளுக்கு எதிரான போராட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கருல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இது குறித்து தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் நிதின் கட்கரி, சுங்கச் சாவடிகளில் அதிகளவு பணம் வசூலிக்கப்படுவதாக சில உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். 

சுங்கச் சாவடிகள் மூலம் வசூலிக்கப்படும் பணமானது, கிராமப்புற மற்றும் மலைப் பகுதிகளில் சாலை அமைக்கப் பயன்படுத்தப்படுகிறது. சுங்கக் கட்டண விகிதங்கள் அவ்வப்போது மாறுபடும். ஆனால் அவற்றை நிறுத்த முடியாது. 

உங்களுக்கு தரமான சாலைகள் வேண்டுமானால், அதற்கு சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே . சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்தமுடியாது என்று அழுத்தம் திருத்தமாகவே கூறிவிட்டார்.

நதின் கட்கரியின் இந்த பதிலால் அதிர்ந்து போன தமிழக எம்.பி.க்கள் திமுகவின் ஆ.ராசா, காங்கிரஸின் செல்லகுமார், வசந்தகுமார் உள்ளிட்ட சுமார் பத்து பேர் கட்கரியின் அறைக்கு அதிரடியாக நுழைந்தனர். 

அவர்களிடம் பேசிய நிதன் கட்கரி, “என்ன தமிழ்நாட்ல மட்டும்தான் நெடுஞ்சாலைத்துறை திட்டங்களுக்கும், டோல் கேட்டுகளுக்கும் கடுமையான எதிர்ப்பு வந்துகொண்டிருக்கிறது என்று கேட்டுள்ளார்.

அதற்கு பதில் அளித்த தமிழக எம்.பி.க்கள் தமிழகத்தில் நடக்கும் டோல் கேட் கட்டணக் கொள்ளையையும், அவற்றை பராமரிக்கும் தனியார் நிறுவனங்களின் அராஜகங்களையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டில் இருந்து கலெக்டர் அலுவலகம் போகிற வழியிலேயே உள்ள டோல் கேட்டை அகற்ற வேண்டும் என ஜெயலலிதாவே வலியுறுத்தியதை சுட்டிக் காட்டினார்.

 இதை கவனமாக கேட்டுக் கொண்ட நிதின் கட்கரி இந்த டோல்கேட் பிரச்சனையில் எதாவது நடவடிக்கை எடுக்க முடியுமா என முயற்சி செய்வதாக உறுதி அளித்துள்ளார்.