இன்று மாலையுடன் ஓய்கிறது இடைத் தேர்தல் போர்… ஆர்.கே.நகரில் அனல் பறக்கும் இறுதி கட்ட பிரச்சாரம்!!
சென்னை ஆர்.கே.நகரில் வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலை 5 மணியுடன் அங்கு தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், சுயேட்சையாக டி.டி.வி.தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம், பாஜக சார்பில் கரு,நாகராஜன் உள்ளிட்ட 59 பேர் களத்தில் உள்ளனர்.
இந்த வேட்பாளர்கள் அனைவரும் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பணப்பட்டுவாடா, தேர்தல் விதிமுறைகள் மீறல் போன்ற பிரச்சனைகள் இருந்த போதிலும் தேர்தல் கட்டாயம் நடக்கும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
இன்று மாலை 5 மணியுடன் இங்கு தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இதனால் இன்று அதிகாலை முதலே அனைத்து வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு வரும் 21-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
இன்று மாலை 5 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் தேர்தல் தொடர்பான யாதொரு பிரசார பொது கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.
பொதுமக்களை ஈர்க்கிற வகையில், இசைநிகழ்ச்சி அல்லது திரையரங்கச் செயல்பாடு அல்லது எவ்வித ஏதேனும் பிறகேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் யாதொரு தேர்தல் விவகாரத்தை பரப்புரை செய்யக் கூடாது.
இந்த விதி முறைகள் மீறப்பட்டால் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் இன்று மாலை 5 மணிக்கு மேல் அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச்சாவடிகளில் இருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக் கூடாது.
இது 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 133-ம் பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டியமுறை கேடான செயலாகும்.
இன்று மாலை 5 மணி முதல் 21-ந் தேதி மாலை 5 மணி வரை கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடு வதற்கும், கருத்துக்கணிப்புக் களை நடத்துவதற்கும் தடைவிதிக்கப்படுகிறது என லக்கானி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.