today nomonation for r.k.nagar

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் வரும் 21 ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சரான ஜெயலலிதா மரணம் அடைந்ததால், அந்த தொகுதி கடந்த 11 மாதங்களாக காலியாக இருக்கிறது.

அந்த தொகுதிக்கு வருகிற டிசம்பர் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது.



இதைத்தொடர்ந்து, தேர்தலை சுதந்திரமாகவும், அமைதியாகவும் நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்து உள்ளன.

தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குநர் கே.வேலுச்சாமி நியமிக்கப்பட்டு இருக்கிறார். உதவி தேர்தல் அதிகாரிகளாக தண்டையார்பேட்டை வட்டாட்சியர் எஸ்.முருகேசன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வேட்புமனு தாக்கல் செய்ய டிசம்பர் 4-ந் தேதி கடைசி நாள் ஆகும். டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதி சனிக்கிழமை,ஞாயிற்றுக்கிழமைஎன்பதால் 2 தினங்கள் விடுமுறை நாட்கள் என்பதால் வேட்புமனுக்கள் பெறப்படமாட்டாது.

5-ந் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் 7-ந் தேதி ஆகும். அன்று மாலை வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

திமுக சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட மருது கணேஷ் மீண்டும் களமிறங்குகிறார். திமுகவுக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்ததைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனதினகரன் சார்பில் டி.டி.வி.தினகரனே மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் யார் வேட்பாளர் என்பது குறித்து இன்று நடைபெறும் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சி களமிறங்க தயாராக உள்ளனர். திமுக, அதிமுக, தினகரன், பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என அங்கு 5 முனைப் போட்டி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.