"தினகரன் நாளை கட்சி அலுவலகம் செல்லவிலை" - இன்று மாலை முக்கிய அறிவிப்பு??
அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நாளை கட்சி அலுவலகம் செல்வதை ரத்து செய்யவுள்ளார் என்றும் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2 ஆக உடைந்த அதிமுக, தற்போது தினகரனை முதலமைச்சர் எடப்பாடி உள்ளிட்ட அமைச்சர்கள் கடுமையாக எதிர்த்து வருவதால், மூன்றாக உடைந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலுவான ஒரு அணி உருவாகியுள்ளதால், திகைத்துப் போன தினகரன், எடப்பாடி பழனிசாமி அணியும் ஓபிஎஸ் அணியும் இணைய வேண்டும் என்றும் அதற்கு 60 நாட்கள் கெடு விதிப்பதாக தெரிவித்தார். மேலும் ஆகஸ்ட் 5 ஆம் தேதிமுதல் தீவிர கட்சிப்பணியில் ஈடுபடப் போவதாகவும், கட்சி அலுவலகத்துக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால் டி.டி.வி.தினகரன், கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகின. இதையடுத்து டி.டி.வி.தினகரன் தனது திட்டத்தை மாற்றி அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, நாளை அவர் கட்சி அலுவலகம் செல்லப் போவதில்லை என்றும் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப் போவதாக தெரிகிறது.
தமிழகத்தை தெற்கு மண்டலம், வடக்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம் என 4 மண்டலங்களாக பிரித்து தினகரன் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலில் தென் மண்டலத்திலிருந்து தனது சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளப் போவதாகவும் தெரிகிறது.